அண்ணலாரின் அவையினிலே..! -2

அண்ணலாரின் அவையினிலே..! -2

ஒருமுறை அண்ணல் பெருமானார் அவர்களிடம் ஒரு ஸஹாபி வந்து,"நாயகமே யாரசூலல்லாஹ்!

நான் தினமும் செய்து வர ஒரு சிறந்த அமலை எனக்கு சொல்லித் தாருங்கள்" என்று கேட்க,அதற்கு பெருமானார் அவர்கள் "நீங்கள் இரவில் விழித்திருந்து இறைவனை வணங்குங்கள். அதுவே அமல்களில் எனக்கு மிகவும் விருப்பமானது" என்று கூறினார்கள்.

அந்த ஸஹாபி,

"நாயகமே! நான் ஒரு விவசாயி. அதிகாலையில் நான் என் தொழிலுக்காக செல்ல வேண்டும்..அதிலிருந்து கிடைக்கும் கூலியை கொண்டுதான் என் குடும்பத்தை கவனிக்க முடியும்.எனவே, இரவில் விழித்திருப்பது என்னால் சிரமமான காரியம் நாயகமே!"

இதைக் கேட்ட அண்ணலார் அப்படியானால் நீங்கள் என் மீது அதிகமாக ஸலவாத்துச் சொல்லுங்கள்.

என் மீது ஸலவாத்து சொல்வதே இறைவனுக்கு மிக விருப்பமான அமல்" என்று திருவாய் மலர்ந்தார்கள்.

அருமை நாயகம்  அவர்கள் கூறுகின்றார்கள்...

"கொடை கொடுக்கக் கூடிய ஒருவன் அவன் பாவியாக இருந்தாலும் கூட,அவனின் கொடைத்தன்மையின் மூலம் இறைவனின் நேசத்திற்குரியவனாக ஆகிவிடுவான்.

ஆனால் ஒரு கஞ்சன் அவன் வணக்கசாலியாக இருந்தாலும் கூட, அவனின் கஞ்சத்தனத்தால் இறைவனின் வெறுப்பிற்குரியவனாக ஆகி விடுவான்"என்று அருளினார்கள்.

இறைவனின் வெறுப்பிற்குரிய கஞ்சன் யார் என்பதை ஸய்யிதினா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கிக் கூறும் பொழுது,

"கஞ்சன் என்பவன் யார் தெரியுமா? எவனொருவன் பெருமானார் அவர்களின் பெயர் கேட்டும் ஸலவாத் சொல்லவில்லையோ அவன் தான் கஞ்சர்களில் எல்லாம் மகா கஞ்சன்" என்றார்கள்.

அண்ணலார் அவர்களின் திருநாமம் மொழியப்படும் பொழுது தத்தமது வேலைகளில் கருத்தாக இருந்துவிட்டு, பெருமானாரின் திருநாமத்தை அவமதித்த பெரும் குற்றத்திற்கு ஆளாகாமல் இறைவன் நம்மை பாதுகாப்பானாக



Post a Comment

Previous Post Next Post