தண்ணீர்க் குடம் எடுத்து தனியாகப் போறவளே!

தண்ணீர்க் குடம் எடுத்து தனியாகப் போறவளே!


நேர் வழிப்  பாதையிலே 
நேர் கொண்ட பார்வையுடன் 
நித்தமும் தண்ணீர்க் குடம் 
எடுத்து தனியாகப் போறவளே 
ஏரிக் கரையோரமாய்  அமர்ந்து 
ஏற இறங்க நான் பார்க்கையிலே 

அன்ன நடையினிலே என்னைக்
கொல்லும் நீயே என் சுகராசி 
அளந்து பேசி என்னுள்  
வெறுப்பையேற்றாதே மகராசி 
அவஸ்தைகள் பல 
எனது நெஞ்சத்திலே ஏத்தி
அலட்டிக்காமல் நீயும் என்னைக் 
கடந்திடலாமோ ராசாத்தி 

கொடுக்கான் போல் சொல் அடுக்கி 
கொட்டுவது போல் நாக்கை நிறுத்தி
இடுக்கும் நண்டாக இதழைப் பிதுக்கி
கடுகடுப்பாக முகத்தை போக்கி 
தடுப்புச் சுவரொன்று எனக்குப்
போட்டு தப்பிக்க நினைக்காதேம்மா  தேவகி 

உன் மதி ஒளியோ ஆண்மையை 
வெல்லும் பால் தேக்கமடி 
உனது கருவிழியோ ஆளைக் 
கொல்லும் தாக்கமடி
துள்ளி ஓடிடும் கெண்டைக்காலுக்கு 
தண்டையாவேன் நானடி
அசைந்து வெறுப்பேற்றிடும் 
இடையினிலும் ஊர்ந்து 
விளையாடிடப் போவதும் நானடி

இதமாக நான் சொல்வதை 
மெதுவாகக்  கொஞ்சம் கேளடியோய் 
வெள்ளிக் குடத்தில் அள்ளிய நீரோ 
கிள்ளிச் செல்கின்றாய்
என்னிதயமதையு பாரடியோய் 
குலுங்கிடும் போது தழும்பும் நீரிலே 
விழுந்து கிடக்கிறேன் நானடியோய் 

தள்ளாத வண்டி நகராதம்மா
சொல்லாத காதல் வெல்லாதம்மா
தூறிய சாரலில் ஊறிய 
காகிதம் போல் ஆன கதை தெரியுமா
உன்னாலே நானும்  பித்தனாய் 
பக்தனாய் சித்தனாய் மாறிடலாமா
கர்த்தர் போல் வந்து 
பதிலொன்று கூறிடம்மா


ஆர் .எஸ் . கலா



 


Post a Comment

Previous Post Next Post