பாண்டு வரைந்த மடல்!

பாண்டு வரைந்த மடல்!


சீரகச்சம்பா அரிசி குத்தி எடு 
சிதறாமல் சேதமின்றி சாதம் செய்திடு
விடக்கோழி விரட்டிப் பிடித்து பிரட்டிடு 
வெண்டக்காய் வதக்கிடு 

ஆற்று நண்டு வறுத்தெடு 
குளத்து மீன் பொரித்திடு 
கிள்ளிய கீரையை கடைந்திடு 
வெட்டிய காயை அவித்திடு 

புடுங்கிய கிழங்கை சுட்டெடு 
காரக் குழம்பு வைத்திடு 
அதிலே கருவாடு போட்டிடு 
அப்பளமும் வைத்திடு 
மோர்மிளகாய் சேர்த்திடு 

பறித்த கனிகளை நறுக்கிடு 
சாத்துக்குடி பழம் தோலை உரித்திடு 
அதனோடு பனிக்கட்டி சேர்த்திடு 
இனிப்பையும் இணைத்திடு 

கணக்கப்பிள்ளை கையிலே கொடுத்திடு
சரக்குப் போத்தலை உள்ளே திணித்திடு
பீடி பையையும் வைத்திடு 
கொட்டப் பாக்கு கொழுந்து 
வெத்தைலை சுண்ணாம்போடு 
 ஏலக்காய் போட்டு மடித்திடு 

தோட்டத்து மல்லிகை எடுத்திடு
முற்றத்து வாழைநார் வெட்டிடு
பூக்களை சரமாய் முடித்திடு 
உன் கரும் கூந்தலில் சூடிடு

கஞ்சியிட்ட  காஞ்சுப் பட்டு உடுத்திடு
மஞ்சள்  போட்டு  பொட்டு வைத்திடு 
அம்சமாய் காட்சி கொடுத்திடு 
அடுத்த ஊரில் நண்பன்  வீடு

அவனின் தங்கைக்குத்  திருமணமாம் 
நமக்கும்  குடும்பத்தோடு 
வரும் படி அழைப்பு உண்டு 
விபரமாய்  மடலைப் படித்து அறிந்திடு 
புரியாத வரிகளை மீண்டும் படித்திடு
இப்படிக்கு உன் கணவன்  #பாண்டு 

     ஆர் எஸ் கலா


 


Post a Comment

Previous Post Next Post