திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-66

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-66


குறள்
780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

மாப்ள... ஒரு தொண்டன் செத்துப் போகும் போது, அவனது தலைவனோட கண்கள்ல கண்ணீர் வந்துச்சுன்னா, அப்படிப்பட்ட சாவினை யாசித்தாவது பெறலாம். அத்தனை பெருமை அந்த சாவுக்கு உண்டு மாப்ள.

குறள் 792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

மாப்ள.. யாரோடயும் கூட்டு வைக்கிறதா இருந்தா, ஏனோ தானோன்னு சேந்திரப்பிடாது. அவொளைப் பத்தி நல்ல அலசி ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிடணும். அப்படில்லாம் செய்யாம கூட்டு சேந்தா, அந்த கூட்டு நமக்கே எமனா வந்து முடிஞ்சிறும் மாப்ள.

குறள் 793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

மாப்ள... ஒருத்தனோட குணம், குடும்ப ஒழுக்கம், அவங்கிட்ட இருக்க குத்தம் குறை, அவனோட சொந்த பந்தம், இந்த நாலைப் பத்தியும் நல்ல தெரிஞ்சுக்கிடணும். பொறவு தான் ஒரு ஆளை சேக்காளியாக்கணும் மாப்ள.

 குறள் 795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

தம்பி.. நம்ம எதாவது தப்பு செஞ்சுட்டோம்னா, நம்ம கண்ணுல கண்ணீர் வருத அளவுக்கு நம்மளை ஏசணும். நல்ல புத்திமதியை அழுத்தமா சொல்லணும். இப்படி செய்யக்கூடிய ஆளுங்களோட நட்பு தான் தம்பி  நமக்கு வேணும்.

குறள் 797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

தம்பி... கூறு கெட்ட ஒருத்தங்கிட்ட இருந்து சட்டு புட்டுன்னு வெலகி வந்துட்டன்னு வச்சுக்கோயேன். அது தான் வாழ்க்கையில ஒனக்கு நடக்குற நல்லது தம்பி.
(தொடரும்)


 


Post a Comment

Previous Post Next Post