Gujarat Election Results 2022: பில்கிஸ் பானு வாழும் தொகுதியிலும் வென்ற பாஜக ! காங்கிரஸுக்கு 3வது இடம்

Gujarat Election Results 2022: பில்கிஸ் பானு வாழும் தொகுதியிலும் வென்ற பாஜக ! காங்கிரஸுக்கு 3வது இடம்

குஜராத்தில் கோத்ரா  கலவரத்தின்போது, கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளாகிய பில்கிஸ் பானு வாழும் லிம்கேடா தொகுதியிலும் பாஜக இந்த தேர்தலில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3வது இடத்தையே பிடித்தது.

தாஹோட் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அதிகம் வாழும் ரன்திக்பூர் கிராமத்தில் பில்கிஸ் பானு தற்போது வசித்து வருகிறார். 

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது.

அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உள்ளிட்ட 7 பேரையும் அவர் கண்முன்னே கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. 

இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், இந்த குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது நன்நடத்தை விதிப்படி ரத்து செய்து விடுதலை செய்யக் கோரினார். அதற்கு குற்றம் நடந்தது குஜராதத்தில், ஆதலால் குற்றவாளிகள் குறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து,  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை நன்நடத்தை அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலையாகினர்.

பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்கார வழக்கு மற்றும் கொலை வழக்குக் குற்றவாளிகள், விடுதலையானபின்னர் நடந்த தேர்தல் என்பதால், நிச்சயம் இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பில்காஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்ததால் அது பாஜகவுக்கு தேர்தலில் பின்னடைவைத் தரும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், பில்கிஸ் பானு வாழும் தோஹோட் மாவட்டத்தில் உள்ள லிம்கேடா தொகுதியில் பாஜக வென்றுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரையும் மீண்டும் சிறையில் அடைப்போம் என்று கூறி காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்தித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி வெறும் 8ஆயிரம் வாக்குகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பில்கிஸ் பானுவையும் சிதைத்து, அவரின் பச்சிளங்குழந்தையைக் கொன்று, குடும்பத்தாரைக் கொலை செய்த 11 பேர் விடுவிக்கப்பட்டநிலையிலும் அங்கு பாஜக வேட்பாளர் வென்றுள்ளார். மனிதராகப் பிறந்த எவரின் மனதையும் உறைய வைக்கும் பில்கிஸ் பானு சம்பவத்தை லிங்கேடா தொகுதி மக்கள் மறந்துவிட்டார்களா, அல்லது, பில்கிஸ்பானுவுக்குத்தானே நடந்துள்ளது, நமக்கில்லையே என்ற எண்ணம் வந்துவிட்டதா எனத் தெரியவில்லை

பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட 11 பேர் குறித்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே பேசியதேதவிர ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத்தில் பேசவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாஜகவின் வெற்றியில் பில்கிஸ்பானு விவகாரம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிதிர்சனம்
asianetnews


 


Post a Comment

Previous Post Next Post