MLA-ஆக களத்தில் நின்று அசத்திய உதயநிதி ஸ்டாலின்.. ஒன்றரை ஆண்டுகளில் செய்த மகத்தான சாதனைகள்!

MLA-ஆக களத்தில் நின்று அசத்திய உதயநிதி ஸ்டாலின்.. ஒன்றரை ஆண்டுகளில் செய்த மகத்தான சாதனைகள்!


2011ஆம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், அவர் தி.மு.க-வின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் தி.மு.க.வின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார். மேலும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து அவருக்கு அங்கீகாரம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இந்த நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணங்களை இங்கே பார்ப்போம்:-

ஒற்றைச் செங்கல் மூலம் பாசிச எதிர்ப்பு:-


சட்டமன்றத் தேர்தலில் இவரின் பிரசாரம் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘ஒற்றைச் செங்கல்’ மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு-அ.தி.மு.க. கூட்டணியின் தமிழர் விரோதப் போக்கை உலகறியச் செய்து, தேர்தல் வெற்றிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர்:

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தன் தொகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அரிசி-மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார். தொகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை ஒருங்கிணைத்தார்.

ரூ.1 கோடி கல்வி உதவித் தொகை:

தனது தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் எனக் கடந்த கல்வியாண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதேபோல தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். தொகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் பழமையான நான்கு குடியிருப்புகளை இடித்துவிட்டு அவற்றுக்குப் பதில் புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணியை விரைவுபடுத்திவருகிறார்.

800 புதிய மின் இணைப்பு:

சட்டச் சிக்கல் காரணமாக நீண்டநாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்த திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி, தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியமைக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இலவச வைஃபை:

பள்ளி-கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் தொகுதி முழுவதும் இலவச இணைய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். தொகுதிக்கென பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கி, தொகுதி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். இதனால் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அடைப்பு போன்ற அத்தியாவசிய தேவை தொடர்பான பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படுவதால், தொகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

மெரினா நடைபாதை:

மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்கும் வகையிலான தற்காலிக சிறப்பு நடைபாதையை நிரந்த பாதையாக அமைக்கவேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இவர் வைத்த கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றித் தந்தார்கள். அந்த நடைபாதையையும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே திறந்தும் வைத்தார்.

பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புப் பணி:

அடையாறு – கூவம் ஆறுகளை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் இவரின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 3.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. அதன் கரைகளின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்வாய் மாசடைந்து கழிவுகளாக ஓடுகிறது. இந்தக் கால்வாயைத் தூர்வாரி சுத்தப்படுத்தி கரைகளை அழகுபடுத்தித் தொடர்ந்து அவற்றைச் சுகாதாரமாகப் பராமரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி-குடிநீர் வடிகால் வாரியம்-நீர்வளத்துறை-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் பணியையும் திறம்பட மேற்கொண்டு வருகிறார்.

முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினர்:

எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் அரசின் நோக்கத்தை மனதில்கொண்டு தன் தொகுதிப் பணி ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்து முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையைப் பிரதிபலிக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் பெருமைமிகு முன்னெடுப்பான ‘செஸ் ஒலிம்பியாட்’ குழுவில் இடம்பெற்றுக் குறிப்பிடத்தகுந்த வகையில், பல பணிகளை ஒருங்கிணைத்து பாராட்டைப் பெற்றார்.

திராவிட மாடல் பயிற்சி பாசறை:

மக்கள் பணியைப்போலவே கழகப் பணிகளிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். ‘ஆட்சிக்கு வந்தால் கட்சியைக் கைவிட்டுவிடுவார்கள்’ என்ற வழக்குமொழிக்கு மாற்றாகக் கழகத்தின் கொள்கைகளை, போராட்ட வரலாற்றை, அதன் மூலம் தமிழ்நாடு பெற்ற பலன்களை இளைஞர் அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’யைத் தொகுதிவாரியாக நடத்தி முடித்துள்ளார்.

முன்னோடிகளுக்கு பொற்கிழி:

இளைஞர்களை, இயக்கத்தை நோக்கி அழைத்து வர ‘பாசறை’ போன்ற கொள்கை பரப்பும் பணிகள் ஒருபுறம் என்றால், கழக வளர்ச்சிக்கு உழைத்த முன்னோடிகளை கவுரவித்து உதவிடும் வகையில், 'இனி நான் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அங்கு முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நிச்சயம் இடம்பெறும்' என அறிவித்து அவற்றைச் செயல்படுத்தியும் வருகிறார்.

இல்லந்தோறும் இளைஞர் அணி:

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு கழகத்தை நோக்கி வரும் இளைஞர்களை வீடுவீடாக சென்று அணியில் சேர்க்கும் ‘இல்லந்தோறும் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பின் மூலம் கழகத்தை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கிறார்.

இவரின் கழகப் பணியை அங்கீகரிக்கும் வகையில், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழகம் இவரை மீண்டும் இளைஞர் அணி செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது. அதேபோல் மிகச்சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேரை இளைஞர் அணி துணைச் செயலாளர்களாகப் பொறுப்புயர்வு வழங்கினார். அதேபோல் மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான இடங்களை நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு, அப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

அமைச்சர் பொறுப்பு:

இவரின் கழகப் பணி - மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருக்கிறார்கள். அவருக்கு ஒதுக்கப்படும் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வெல்வார் என்பதில் ஐயமில்லை.
kalaignarseithigal



 


Post a Comment

Previous Post Next Post