Ticker

6/recent/ticker-posts

மன்னர் கேட்ட கேள்வி?

ஒரு முஸ்லிம் மன்னர் தன் அமைச்சர்களை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வை தொழுதுக் கொண்டு இருக்கும் பொழுது அந்த வழியே ஒரு பெரும் படை சென்றால் உங்களுடைய கவனம் சிதறாமல் இருக்குமா?”என்று கேட்டார்.

“கவனம் சிதறாமல் எப்படி இருக்க முடியும் மன்னா!” என்று அமைச்சர்கள் கேட்டனர்.

“கவனம் சிதறாமல் இருக்க முடியுமா? முடியாதா?” என்று மன்னர் திரும்பவும் கேட்டார்.

“சிதறாமல் இருக்க வாய்ப்பே இல்லை” என்றனர் அமைச்சர்கள்.
மன்னர் அமைதியாக இருந்துவிட்டார்.

சில நாட்கள் சென்றன....

அரசவை கூடியது. மன்னர் அமைச்சர்களை நோக்கி சொன்னார்.
உங்களிடம் தண்ணீர் உள்ள கோப்பையை கொடுப்பேன். அதை கையில் ஏந்திய வண்ணம் கடை வீதியை சுற்றி வர வேண்டும். கோப்பையில் உள்ள தண்ணீர் ஒரு சொட்டு கூட கீழே சிந்தக்கூடாது” என்று கூறி ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு படைவீரனை நியமித்தார்.

இவர்களுடன் நீங்களும் செல்லுங்கள். இவர்களின் கோப்பையில் இருந்து தண்ணீர் சிந்தினால் தயவு தாட்சனை பார்க்காமல் கழுத்தை சீவி விடுங்கள்” என்றார்.

நடுநடுங்கி போன அமைச்சர்கள் எதுவும் பேசாமல் கடை வீதியை சுற்றி வந்தார்கள்.

மன்னர் கேட்டார் “தண்ணீர் கீழே சிந்தாமல் கொண்டு வந்தீர்களா?” என்று கேட்டார்.

“ஆம் மன்னா!” என்றார்கள்.

கடைத்தெரு சென்றீர்களே அங்கு நல்ல கூட்டமா? வியாபாரம் நன்றாக நடக்கின்றதா? மக்கள் நமது ஆட்சியைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்?” என்றுக் கேட்டார்.

சலிப்படைந்த நிலையில் அமைச்சர்கள் சொன்னார்கள்: “எங்கே மன்னா! அதையெல்லாம் கவனிக்க முடிந்தது? எங்கள் கவனம் எல்லாம் கோப்பையிலே இருந்தது. தண்ணீர் சிந்தினால் எங்கள் கழுத்து காணாமல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக நாங்கள் எதையுமே கவனிக்கவில்லை” என்றனர்.

சிரித்துக்கொண்டே மன்னர் சொன்னார்: மறைந்து விடும் இந்த மன்னரின் தண்டனைக்குப் பயந்து கவனமுடன் அவன் சொன்னதை நிறைவேற்றிய நீங்கள் என்றும் அழியா சர்வ வல்லமை உள்ள அல்லாஹ்வின் மீது அச்சம் இருந்தால் அவனைத் தொழும் பொழுது வேறு கவனம் ஏற்படுமா?” என்று கேட்டார்.

தங்கள் தவறை உணர்ந்த அமைச்சர்கள் “உள்ளச்சத்துடன் தொழ நாங்கள் முயற்சி செய்கின்றோம்” என்றார்கள்.

அன்பு சகோதரர்களே! மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஒரு நூலில்  படித்தேன். அது உண்மையா? கற்பனையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் உண்மையானவை.

ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்.

23:2   الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

23:2. அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்;” 

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்:
 “அல்லாஹ்வை பார்ப்பது போன்று வணங்குங்கள் நீங்கள் அவனை பார்க்காவிட்டாலும் அவன் உங்களைப் பார்க்கிறான்."
(நூல்: தப்ரானி)

தொகுப்பு;சுபைதா.துபாய்


 


Post a Comment

1 Comments

  1. சிறப்பான பதிவு

    ReplyDelete