பெருமைக்கு மா இடிப்பவர்கள்!

பெருமைக்கு மா இடிப்பவர்கள்!


எங்களிடம் வழக்கமாக ஒரு வசனம் இருக்கின்றது.இந்த வசனத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாதாரணமாக பாவிக்கின்றோம் .

அதுதான் "பெருமைக்கு மா இடிப்பது "என்பது.

இது நம்ம்மில்  பலருக்கு மிகவும் பொருத்தமாயிருக்கின்றது.புற்றீசல்கள் போல் கிளம்பியிருக்கும் தர்மகர்த்தாக்கள் எதற்கு ,எப்படி,யாருக்கு தர்மம் செய்வது என்று தெரியாமல் கண்முன் தன்னை புகழ்கின்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

கடந்த மூன்று வருடங்களாக கொரோன தொற்றுப் பரவ புதிய தர்மகர்த்தாக்களும் உருப்பெற ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொருவரும் நான் முந்தி நீ முந்தி என்று மக்களுக்கு உதவிகள் செய்தார்கள்.

ஒருபுறம் உதவிகளும் மறுபுறம் போட்டோ சூட்டிங்கும் நடத்திக்கொண்டிருந்தார்கள் .அது இன்றும் நடந்துகொண்டிருக்கின்றது.  

போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதில் பெருமைப்பட்டுக்கொள்கின்ற கொடுமையை பார்க்கின்றோம்.

இது மிகவும் மோசமான ஒரு செயல் என்று இவர்களின் புத்திக்கு ஏன் எட்டவில்லை என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாயிருக்கின்றது.

பெருமைப்படுகின்றவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றார்கள் 

சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும் தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)” என்று கேட்டார். “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகை விரும்புகிறான். பெருமை கொள்வது என்பது சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை இழிவாக எண்ணுவதுமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : முஸ்லிம்-147 (131)

கஷ்டப்படுகின்ற ஒருவருக்கோ ஒரு குடும்பத்திற்கோ உதவும் நோக்கம் இருந்தால்  தனிப்பட்ட ரீதியில் ரகசியமாக அதை நிவர்த்தி செய்யலாம் .அப்படியில்லாத பட்சத்தில் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவேண்டும். 

தர்மம் செய்யும்போது ஏற்றத் தாழ்வுகள் பார்க்கக் கூடாது.பொருளாதாரத்தில் பின் தங்கியிருகின்றவர்களை தேடிப்பிடித்து உதவ வேண்டும்.

சிலர் வெட்கத்தில் வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான நிலையில் இருப்பார்கள் .அவர்களை இனம் கண்டு உதவுவது மிகப் பெரும் பாக்கியமாகும்.

பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சியும், மறு மலர்ச்சியும் ஏற்பட ‘ஸகாத்’ எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.

ஆனால் இன்று ஒரு சில கொடை வள்ளல்கள்,கைநீட்டுகின்றவர்களை வாழ்நாள் முழுவதும் கைநீட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.அவர்களை புகழ்ந்து கொண்டேயிருக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இன்று பணக்காரர்கள் நினைத்தால் ஒவ்வொரு ஊரிலும் கஷ்டப் படுகின்றவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுகொடுக்கலாம்.வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.இப்படியாக கைநீட்டுகின்ற கஷ்டப்படுகின்றவர்களில் வருடத்திற்கு ஒருவருக்காவது ஏதாவது வருமானம் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்கலாம்.அவர்களும் எதிர்வரும் காலத்தில் சதகா,சக்காத் கொடுக்கும் நிலைக்கு மாறக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பணக்கார்கள் நினைத்தால் ஏழைகள் என்ற ஒரு இனமே இல்லாமல் போய்விடும்.ஜாதி மதங்களை கடந்தது பசி பட்டினி.இனவேறுபாடு இல்லாமல் மனிதர்களை மனிதர்களாய் பார்த்து உதவி செய்ய வேண்டும்,இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றார்கள்.

கொரோனாவை விட கொடியது பசி.இன்று அநேகமான மனிதர்கள் அந்த கொடிய பசியை அனுபவிக்கின்றார்கள்.மனித குலத்திற்கே சவாலாக இருக்கின்றது இந்தப் பசி.

தொழில் நுட்பத்திற்காக செலவுகள் செய்கின்ற தொகையில் ஒரு சிறுதொகையை மனிதர்களின் பசியைப் போக்க செலவு செய்தாலே இந்த உலகத்தில் எந்த ஒரு மனித உயிரும் பசியில் இறக்கின்ற நிலை ஏற்படாது.

துப்பாக்கிச் சூட்டில்,குண்டுத்தாக்குதலில் இறக்கின்ற மனித உயிகளைவிட பசியில் இறக்கின்றவர்கள்தான் இன்று அதிகம்.

தர்மம் செய்பவர்கள் புரிந்துகொண்டால் சரி
மாஸ்டர்




 


Post a Comment

Previous Post Next Post