Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-1௦1


குறள் 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.

 
மாப்ள.. ஒண்ணு இருக்கு .. அப்படின்னு ஆதாரத்தோட வெவரமான ஊர்க்காரவுக சொல்லுவாக. 

அப்படில்லாம் கெடையாதுன்னு அறிவு இல்லாத ஒருத்தன் மறுத்துச் சொல்லுவான். 

இப்படி எதுத்து சொல்லுதவனை இந்த ஒலகம் உருவமில்லாத பேய்ன்னு தான் சொல்லும் மாப்ள. 

குறள் 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.

தம்பி.. ஒருத்தன் நம்ம சங்காத்தமே வேண்டாம்னு நெனச்சு, நமக்கு பிடிக்காததை செஞ்சாலும் அதை சட்டை பண்ணக்கூடாது. பதிலுக்கு எந்த கெடுதலும் செய்யாம இருக்கணும் தம்பி. 

குறள் 854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

தம்பி.. ஒரு மனுசனுக்கு தும்பம் பல உருவத்துல வரும். அதுல ஒண்ணு தான் பகை. அது தான் இருக்க தும்பத்துலயே பெருந்தும்பம். 

இதை மட்டும் ஒருத்தன் விட்டுத் தொலைச்சிட்டாம்னா, அது தான் இன்பத்துலேயே ஒயர்ந்த இன்பம். நல்ல புரிஞ்சுதா தம்பி. 

குறள் 855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிக்லூக்கும் தன்மை யவர்.

மாப்ள.. மத்தவங்களோட கருத்து நமக்கு ஒத்துப் போகலைன்னு தெரியுதா? அதை அப்பமே மறந்துட்டு, அவங்களோட இணக்கமா போகக்கூடிய தெறமை நமக்கு இருக்கணும். இப்படி இருந்துட்டா யாராலயும் நம்மை அடிச்சுக்க முடியாது மாப்ள. 

குறள் 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.

தம்பி.. சட்டுன்னு கோவப் படுதவொளும், மனசை அலை பாய விடுதவொளும் இருப்பாவொ. அவொளை எல்லாம், யாராலயும், எப்பம்னாலும், எங்க வச்சும் சுளுவா மடக்கிறலாம் தம்பி. 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments