அச்சுறுத்தும் புது ஜேஎன்1 கொரோனா.. உன்னிப்பாக கண்காணிக்கும் WHO.. கூடவே சொன்ன ஆறுதல் தகவல்

அச்சுறுத்தும் புது ஜேஎன்1 கொரோனா.. உன்னிப்பாக கண்காணிக்கும் WHO.. கூடவே சொன்ன ஆறுதல் தகவல்


வாஷிங்டன்: இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா வைரசின் புது வகை ஜே.என்.1 துணை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி விட்டு சென்றது.

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பு பொருளாதார பாதிப்பு என மக்களை நிலைகுலையை வைத்த கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்த தொடங்கிய பிறகே கட்டுக்குள் வந்தது. அதன் பிறகும் கொரோனா வைரஸ் உருமாறி அவ்வப்போது அதிவேகமாக பரவினாலும் பாதிப்பு என்பது துவக்கத்தில் இருந்தது போல இல்லை.

இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. ஏற்கனவே இதன் காரணமாக கர்நாடக அரசு 60 வயதைக் கடந்தோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மீண்டும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க உள்ளதாக அறிவித்துவிட்டது. இதற்கிடையே சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 79 வயதான பெண் ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா கண்டறியப்பட்டது. உலகின் பல நாடுகளில் கொரோனா திடீரென அதிகரிக்க இந்த ஜே.என்.1 கொரோனா தான் காரணமாக உள்ளது. இந்தியாவில் இந்த கொரோனா கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜேஎன் 1 வகை கொரோனா என்பது ஓமிக்ரான் BA.2.86 வகை அல்லது பைரோலாவின் துணை வேரியண்ட் ஆகும். இந்த வைரஸ் பாதிப்பு முதலில் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியபட்டது. அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி சீனாவில் 7 பேருக்கு இந்த புதுவகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனாவின் அறிகுறிகளாக லேசான காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி ஆகியவை உள்ளன.

இந்த நிலையில், ஜே என் 1 கொரோனா வைரஸை வேரியண்ட் ஆப் இண்ட்ரெஸ்ட் என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதை குறிக்கும் விதமாக உலக சுகாதார அமைப்பு இப்படி வகைப்படுத்தியுள்ளது. அதேபோல், பொதுமக்களுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக இந்த புதிய திரிபு இல்லை என்றும் தற்போது கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் ஜே.என்.1 வைரசின் பொது சுகாதார அபாயம் தற்போது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளே தீவிர பாதிப்பு ஏற்படாமலும் உயிரிழப்பையும் தடுக்க போதுமானதாக இருக்கும் எனவும் ஹூ தெரிவித்துள்ளது.

oneindia


 



Post a Comment

Previous Post Next Post