3-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

3-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)



02) தடுப்பு (ஸுத்ரா) ஒன்றை முன்னால் வைத்தல் : 

தனியாக தொழுபவர்களும் இமாமாக தொழுகை நடத்துபவரும் தமக்கு முன்னால் தடுப்பு (ஸுத்ரா) ஒன்றை வைத்துக் கொள்வது, அல்லது இருக்கின்ற தடுப்பொன்றை முன்னோக்கி தொழுவது நபியவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும்.

தடுப்பு என்பது சுவராகவோ, தூணாகவோ, கதிரையாகவோ,தடியாகவோ வேறு எதுவாகவும் இருக்கலாம். பலர் இது பற்றி அறியாதிருக்கின்றனர். அறிந்திருந்தாலும் செயற்படுத்துவதில் மிக பொடுபோக்காக இருக்கின்றனர்.

நபியவர்கள் கூறினார்கள் : தடுப்பு ஒன்றை முன்னால் வைக்காமல் தொழவேண்டாம். (தொழும்போது) உங்களுக்கு முன்னால் யாரும் குறுக்கே செல்ல விட வேண்டாம்..(ஸஹீஹ் இப்னு ஹுஸைமா). 

தடுப்பொன்றை முன்னோக்கி தொழுவது மாத்திரமல்ல,அத்தடுப்புக்கும் தொழுபவருக்கும் இடையே மூன்று முழம் இடைவெளி இருக்கும் வகையில் தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும்.

நபியவர்கள் தொழும்போது தடுப்புக்கு நெருக்கமாக நிற்பார்கள். அவர்களுக்கும் தடுப்புக்குமிடையே மூன்று முழம் இடைவெளி இருக்கும் (புஹாரி, அஹ்மத்). 

1) நபியவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த மைதானத்தில் நிறைவேற்றும்போது முன்னால் தடியொன்றை நட்டி அதை தடுப்பாகக் கொண்டு தொழுகையை நிறைவேற்றுவார்கள் (நஸாஈ, இப்னு மாஜஹ்). 

2) பிரயாணத்தில் இருக்கும் போது தொழ நேர்ந்தால் ஏதாவதொன்றை தடுப்பாக வைத்து அதை முன்னோக்கி தொழுவார்கள். எதுவும் கிடைக்காத போது தனது வாகனத்தையே தடுப்பாக வைத்துக்கொள்வார்கள் (புஹாரி, பைஹகி). 

3) மதீனா பள்ளிவாசலில் சில வேளைகளில் அங்குள்ள தூணை தடுப்பாக முன்னோக்கி நபியவர்கள் தொழுவார்கள் (புஹாரி). 

4) பத்ரு யுத்தத்திற்காக போர்க்களத்தில் நபியவர்களும்ஸஹாபாக்களும் தங்கியிருந்த போது இரவு வேளை அங்கிருந்த மரத்தை தடுப்பாக கொண்டு தொழுதார்கள் (அஹ்மத்). 

இந்தளவுக்கு நபியவர்கள் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்து தொழுவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாறு ஸுத்ரா எனப்படும் தடுப்பொன்றை முன்வைத்து தொழுவதால் தொழுகையில் கவனம் கலையாமல் இருப்பதோடு, ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் பாதுகாப்பு பெறலாம்.

குறிப்பு : ஆண்கள் மட்டுமன்றி வீட்டில் தொழும்பெண்களும் சுவரையோ, கதிரை(நூற்காலி), மேசை போன்றவற்றையோ தடுப்பாக வைத்து தனக்கும் தடுப்புக்குமிடையில் ஸுஜூத் செய்வதற்கு வசதியாக மூன்று முழம் அளவுக்கு இடைவெளி விட்டு தொழுகையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இமாமை பின்பற்றி மஃமூமாக தொழுபவர்களுக்கு இமாமே ஸுத்ராவாக இருக்கிறார் என்பதால் அவர்கள் தடுப்பு வைக்கத் தேவையில்லை. 

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

Previous Post Next Post