முதுமைக்கு ‛குட்பை’ .. தினம் 3 கப் ‛டீ’ குடிங்க போதும்! தேநீர் பிரியர்களுக்கு குட்நியூஸ் தந்த ஆய்வு

முதுமைக்கு ‛குட்பை’ .. தினம் 3 கப் ‛டீ’ குடிங்க போதும்! தேநீர் பிரியர்களுக்கு குட்நியூஸ் தந்த ஆய்வு

பெய்ஜிங்: இன்றைய காலக்கட்டத்தில் ஒரு தரப்பினர் அதிகமாக டீ குடிப்பவராக உள்ளனர். இன்னொரு தரப்போ டீ குடிப்பது உடலுக்கு கேடானது எனக்கூறி அதனை அறவே ஒதுக்கி விடுகின்றனர். டீ எனும் தேநீர் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இப்போது சீனா மேற்கொண்ட புதிய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தினமும் 3 கப் டீ பருகினால் இளமையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீ.. உண்மையில் பலரின் ‛பேவரைட்'. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடு இன்றி டீ எனும் தேநீரை அனைவரும் பருகி வருகிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை சிலர் 10க்கும் அதிகமான டீயை குடித்து விடுகின்றனர்.

அதேவேளையில் வேலை தேடி வெளியூர் செல்லும் இளைஞர்களின் பட்ஜெட் கையை கடிக்கும்போது உணவை ‛கட்' செய்துவிட்டு டீ குடித்தே நாட்களை கடத்துவது தற்போதும் நடந்து வருகிறது. டீ மீதான மக்களின் அலாதி பிரியத்தால் தான் டீ கடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

தெரு முனைகளில் இருக்கும் சிறிய கடை முதல் பெரிய பெரிய நகரங்களில் மனதை கவரும் வகையிலான உள்கட்டமைப்புடன் கூடிய பெரிய கடைகள் வரை பிரத்யேகமாக டீ மட்டும் விற்பனை செய்கின்றன. இப்படி டீ-க்கு என்றே தனியாக மக்கள் இருப்பது போல் டீ-யை விரும்பாமலும் ஒரு தரப்பு உள்ளது. டீ என்பது உடல்நலத்துக்கு கேடானது என்ற வாதத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் தான் டீ குடிக்கும் நபர்களிடம் சீனாவின் செங்டுவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் என்பது ‛தி லான்செட் ரீஜினல் ஹெல்த் - வெஸ்டர்ன் பசிபிக்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டீ குடிப்பது என்பது முதுமை வராமல் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டீ குடிக்கும் நபர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதன்படி 37 வயது முதல் 73 வயதுக்குள்ளான 5,998 பிரிட்டிஷ் மக்களிடமும், சீனாவில் சீனாவில் 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 7,931 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் ஹெல்த்தியான உணவு எடுத்து கொள்பவர்கள், மதுபானம் அருந்துவோர், கவலை மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களிடம் தினமும் எத்தனை கப் டீ குடிப்பார்கள். பிளாக், கிரீன், ரெட் அல்லது பாரம்பரியமான சீன ஓலாங் டீ உள்ளிட்டவற்றில் எந்த வகையான டீ குடிப்பார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விகள் மூலம் அவர்கள் குடித்த டீ மற்றும் உடலில் உள்ள கொழுப்பு சதவீதம், இரத்த அழுத்தம் ஆகியவற்றை தொகுத்து பயோலாஜிக்கல் வயதைக் கணக்கிட்டனர். இந்த ஆய்வில் டீ குடிப்பதால் முதுமையை எட்டிப்பார்ப்பதில் தாமதம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒருநாளைக்கு 3 கப் டீ அல்லது 6 முதல் 8 கிராம் தேயிலை இலைகளை எடுத்து கொள்வது என்பது முதுமை அடைவதை தடுத்து இளமையாக காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் அதிகமாகவும் இன்றி, குறைவாகவும் இன்றி மிதமான அளவில் (Moderate Tea) டீ குடிக்கும் நபர்கள் டீ மூலம் வயதாவதில் இருந்து தப்பிக்கின்றனர்.

ஆனாலும் இந்த ஆய்வு கருத்துகள் என்பது வெறும் கணிப்பின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீ குடிப்பதை நிறுத்தியவர்களுக்கு முதுமை என்பது அதிகரிக்கிறார். ஆனாலும் கூட டீ குடிப்பது என்பது உண்மையிலேயே பயோலாஜிக்கல் வயதை குறைக்குமா? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் டீ குடிப்பதால் சில நன்மைகள் உள்ளன. அதாவது டீ-யில் பாலிபினால்கள் உள்ளன. இது குடல் பாக்டீரியாவை மாடுலேட் செய்வதிலும், நோயெதிர்ப்பு சக்திக்கான அமைப்பு, மூளையின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தேயிலை சார்ந்த பொருட்களை எடுத்து கொள்வது என்பது இதய நோய்கள், நீரிழிவு நோய், டிமென்ஷியா மற்றும் சில வகை புற்றுநோய்கள் போன்ற வயது தொடர்பான நோய்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

oneindia
 


 



Post a Comment

Previous Post Next Post