புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-21

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-21


இன்று செரோக்கியின் தந்தை அவரது நண்பர்களோடு ‘ரியோ கரோனி’ வடிகால் ‘ஒரிநோகோ’ நதியுடன்  கலக்கும் இடத்திற்கு மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி செரோக்கி ரெங்க்மாவைப் பார்க்கச் செல்ல ஆயத்தமானான்!

நகர இனிப்பகமொன்றிற்குச் சென்றிருந்தபோது, நண்பன் இர்வின் வாங்கி, அன்பளிப்பாகத் தந்த இனிப்புப் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு ரெங்க்மாவின் ஜாகை நோக்கி நடந்தான் செரோக்கி!

தனது மூப்பு நீராட்டு விழா முடிவடைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு செரோக்கியைக் கண்டதும் ரெங்க்மா பூரிப்படைந்தாள்!

அவர்களுக்குள் இப்போது ஏற்பட்டிருப்பது இரத்த உறவா அல்லது இதயங்களின் இணைப்பா?   

தந்தையுடன் வனத்துக்குள் செல்வது, அத்தையின் கணவரோடு வனத்துக்குள் சென்று வேட்டையாடக் கற்றுக்கொள்வது, நண்பனிடம் மொழி கற்பதுடன், வெளியுலகைக் கண்டு வருவது போன்ற சகலவற்றிலும் சுறுசுறுப்பாக இயங்கி, வளர்ச்சியயடைந்து கொண்டிருந்த செரோக்கி, ரெங்க்மாவின் நினைவிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதுமுண்டு. அதே உணர்வை அவளும்  தனக்குள் கொண்டுள்ளாள் என்பதை செரோக்கியால்  இதுவரை புரிந்து கொள்ளமுடியவில்லை!

விழாவுக்குப்பிறகு ஏதோ ஒருவகையான உரிமை கலந்த உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. அதனால் எவ்வித சம்பிரதாயமின்றி ஜாகைக்குள் நுழைந்த அவன், அங்கிருந்த விரிப்பில் சாவகமாக அமர்ந்து கொண்டான்!
செரோக்கியைக் கண்டதும் - தனது தாயை அழைத்து வர ஜாகையின் பின்புலத்து வாயில் வழியாகச் சென்ற ரெங்க்மா, சிறிது நேரத்தில் முன் வாயில் வழியாக வந்து,  நிலையில் சாய்ந்தவாறு கண் இமைக்காமல் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள்!

பதிலுக்கு அவன் கண்களும் அவளை ஊடுருவின. உச்சந்தலையிலிருந்து வதனம் வந்து,  உதடுகளில் தரித்து நின்று, கழுத்தை அடைந்த அவனது கூரிய கருநிறக் கண்கள்; அதற்கும் கீழ் இறங்கி வந்ததும் அப்படியே சொக்கித்துப் போயின! அவளது அபார வளர்த்தியின் வடு அங்கு தொக்கி நிற்பதை கண்டு கொண்ட அவனை, பட்டைக் கவசத்துக்குள்ளிருந்து வெளியேறத் துடித்துக்  கொண்டிருந்த அவளது மார்கள் கிரங்கச் செய்துவிட்டன!

ஒரு காலத்தில் பாப்பாவாக இருந்த அவளை  அவனது தந்தை அறிமுகப்படுத்தி வைத்து, இரத்த உறவின் இரகசியத்தை அம்பலப்படுத்தினார்! 

அடுத்தடுத்து பல வடிவங்களில் ரெங்க்மாவை பார்த்த செரோக்கி - இறுதியாக அவளது மூப்பு நீராட்டு வைபவத்தின்போது அவளை ஓர் அழகுத் தேவதையாகக்  கண்டான்!

காளை மாட்டின் மீது ஏறி,  கிராமத்தைச் சுற்றி வந்து, தன் ஜாகை முன்றலில் இறங்கி சகதோழிகளோடு அன்றைய தினம் அவள் நடனமாடியதை அவன் வெகுவாக ரசித்தான்!

அதுவுமல்லாமல் தான் வேட்டையாடிவந்த மான் கொம்பிலிருந்து அவன் வடிவமைத்த அணிகலன்களை அவள் தனது காதுளிலும் கைகளிலும் கழுத்திலும் அணிந்து, அடிக்கடி அவற்றை தன் தோழிகள் முன்னிலையில் பெருமையுடன் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன்  ஒலிந்திருந்து கவனிக்கத் தவறவில்லை!

தனது தோழர் - தோழியரோடு நடனமாடிக் கொண்டிருந்தபோத ரெங்க்மா அவர்களை விட்டும் நாசூக்காகக் கலண்டு, அவனிடத்தில் வந்து, அவனது கரங்களைப் பிடித்திழுத்துத் தன்னோடு நடனமாடச் செய்ததையும், முதன் முதலாக ஓர் அழகிய இள மங்கையுடன் தான் நடனமாடியதையும் இப்போது நினைத்தாலும் கூட அவனது உள்ளம் பரவசமடைகின்றது!

அந்த நாளைக் கடந்து வந்த அவன், இன்று அவளைப் பார்க்கின்றபோது மேலும் வியப்படைந்தான்! அந்தளவுக்கு அமித வளர்த்தியும், துறுதுறுப்பும் அவளிடம் தென்பட்டது!

வெளியுலகில் இவள் பிறந்து வளர்ந்திருந்தால் கவர்ச்சிகரமான ஆடை அணிகளால் அலங்கரிக்கப்பட்டு ஓர் அழகுத் தேவைதையாக மிளிர்ந்திருந்திருப்பாள்!

“புரோகோனிஷ்”கிராமத்தின் காடு-மேடுகளில் சின்னஞ் 
சிறுவனாக ஓடியாடிய அவன் கூட இப்போது வாலிபனாட்டம் வளர்ந்துள்ளதை அவள்  ரசிக்காமலா இருந்திருப்பாள்?

செரோக்கி பொட்டலத்தை அவளிடம் நீட்டவே, ஒன்றையொன்று ஊடுருவியிருந்த நான்கு கண்களும் மௌன மொழியின் சங்கமத்திலிருந்தும் விடுபட்டன! 

(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post