இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது.
முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பகுதியில் வாழும் ராமலிங்கம் சத்தியசீலன், அந்தப் பகுதியில் பிரபல வர்த்தகராக விளங்கி வருகின்றார்.
இரும்பு வியாபாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது வர்த்தகத்தை வியாபித்துள்ள சத்தியசீலன், உள்நாட்டுப் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவராவார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சத்தியசீலன் வாழ்ந்தாலும், ஆயுதப் போராட்டத்தில் தான் ஈடுபட்டதில்லை எனக் கூறுகின்றார்.
''போர் முடிவடைந்து முகாமிலிருந்து வெளியில் வரும் போது 300 ரூபாயுடன் வந்தேன். ஆனால் இன்று வியாபாரத்தில் சிறந்து விளங்குகின்றேன்," என அவர் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுக்க முயன்ற தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையைத் தனது வாழ்க்கையில் இன்றும் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார் சத்தியசீலன்.
தமது குடும்பத்திற்கான உணவு வகைகளை தானே விவசாயம் செய்வதுடன், அதனூடாகத் தனது அன்றாட உணவுத் தேவையை சத்தியசீலன் நிறைவு செய்கின்றார்.
"தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கை பின்பற்றினேன்"
''தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையால் ஊக்கமளிக்கப்பட்டவன் என்ற விதத்தில் அம்மாவை ஊக்கப்படுத்தி, உளுந்து உள்பட பல விதமான தானியங்களை விதைத்தோம். 199-ம் ஆண்டுக்குப் பின்னர் தான் மூன்று நேரமும் தானியங்களை அவித்துச் சாப்பிட்டோம். 1995-ஆம் ஆண்டுக்கு பிறகு தான் எங்களால் போஷாக்கான மனிதர்களாக உருவெடுக்க முடிந்தது," என அவர் குறிப்பிடுகின்றார்.
'தேக்கு மரம் நட்டேன், மாடு வளர்க்கிறேன்'
கடந்த ஆண்டு தான் 1,500 தேக்கு மரங்களை நட்டதாகக் கூறும் சத்தியசீலன், இப்போது ஒரு மரத்தை நடுவதற்கு 100 ரூபாய் ஆகும் என்றும் கூறினார்.
“20 வருடம் அந்த தேக்கு மரம் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியாகும். அப்படியென்றால், 1,500 மரங்களுக்கு எவ்வளவு வருமானம். அதேபோன்று, எங்களுடைய காணிகள் சோலைகளாகக் காட்சியளிக்கும். பனை மரங்களை நட்டுள்ளேன். 400 தென்னை நட்டுள்ளேன். வாழை நட்டுள்ளேன்,” என்கிறார், சத்தியசீலன்.
மேலும் பேசிய அவர், “12 வருடங்களுக்கு முன்பு மூன்று மாடுகளை 9,000 ரூபாய்க்கு வாங்கினேன். இன்று 65 மாடுகளை வைத்திருக்கின்றேன். அனைத்து கட்டமைப்புகளையும் நான் சமநேரத்தில் உருவாக்கி வருகின்றேன்," என அவர் கூறுகின்றார்.
'இதுவரை ஒரு சினிமா கூட பார்த்ததில்லை'
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, தனது வாழ்க்கையில் ஒரு சினிமா கூட இன்று வரை பார்த்ததில்லை என முல்லைத்தீவைச் சேர்ந்த சத்தியசீலன் தெரிவிக்கின்றார்.
“எங்களுடைய வீட்டில் ஒரு தொலைக்காட்சி கூட இல்லை. நான் பிள்ளைகளுக்குச் போனில் செய்திகளை மாத்திரம் பார்க்கச் சொல்வேன். வரலாறுகளை போனில் காட்டுவேன்," என சத்தியசீலன் குறிப்பிடுகின்றார்.
bbc
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கட்டுரை
பாராட்ட வேண்டிய விடையம் இது போன்றோர் இன்னும் பலர் இருக்கலாம் இருந்தும் சிலர் வீணாகி போய் விட்டனர் வாழ்க்கைல.
ReplyDelete