France Election 2024: இம்மானுவேல் மக்ரோன் கட்சிக்கு படுதோல்வி?

France Election 2024: இம்மானுவேல் மக்ரோன் கட்சிக்கு படுதோல்வி?


நாடாளுமன்றத்தை கைப்பற்றும் எதிர்க்கட்சி!!

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் முடிவில் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி பின்னடவை சந்தித்துள்ளது. இது எந்த வகையில் இம்மானுவேலை பாதிக்கும் என்று பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் முடிவு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. வலது சாரி அணியான நேஷனல் ரேலி முதல் இடத்திலும், இடது சாரி அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. இம்மானுவேல் மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.  நேஷனல் ரேலி கட்சிக்கு மரைன் லே பென் தலைமை தாங்கி வருகிறார்.

முதல் சுற்றில் நேஷனல் ரேலி கட்சி முன்னணி வகித்து வந்தாலும், வரும் ஜூலை 7ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட சுற்று தேர்தல் தான் முடிவுகளை நிர்ணயம் செய்யும். இதையடுத்தே, மரைன் லே பென்னுக்கு அடுத்து இரண்டாம் கட்டத்தில் இருக்கும் 28 வயதாகும் ஜோர்டான் பர்டெல்லா பிரதமராக பதவி ஏற்பாரா என்பது தெரிய வரும்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அதிபர் பதவி தான் உயர்ந்தது என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எடுக்கும்  முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் அதிபர் என்பதால் இங்கு இம்மானுவேலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.  பிரான்ஸ் நாடாளுமன்றம் மொத்தம் 577 எம்பிக்களைக் கொண்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் இம்மானுவேல் மக்ரோன் நீடிப்பார். அப்படி இருக்கும்போது, மூன்றாம் இடத்திற்கு முதல் சுற்றில் தள்ளப்பட்டு இருக்கும் அதிபருக்கு முடிவுகளை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். 

பிரான்ஸ் நாட்டின் சில நிறுவனங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் சுற்றில் முதல் இடத்தில் இருக்கும் நேஷனல் ரேலி கட்சிக்கு 33.2 முதல் 33.5 சதவீத வாக்குகளும், இடது சாரிக்கு 28.1 முதல் 28.5 வாக்குகளும், மூன்றாம் இடத்தில் இருக்கும் மக்ரோன் கட்சிக்கு 21.0 முதல் 22.1 வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

இரண்டாம் சுற்றில் நேஷனல் ரேலி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்புகளை வைத்துப் பார்த்தாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கு 289 இடங்களைப் பிடிக்குமா என்பது சந்தேகமே. இரண்டாம் கட்ட சுற்று தேர்தல்தான் இதை முடிவு செய்யும். இரண்டாம் சுற்றில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கு இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்து இருக்கிறார். இது முதல் சுற்றில் இழந்த வாக்குகளை பெறுவதற்கு உதவும் என்றும், நேஷனல் ரேலி கட்சி தனி மெஜாரிட்டி பெறாமல் தடுப்பதற்கு இது உதவும் என்றும் இம்மானுவேல் நம்புகிறார்.

கடந்த மூன்று முறை நடந்த தேர்தலிலும் அதிபருக்கான தேர்தலில் நேஷனல் ரேலி கட்சியின் தலைவர் மரைன் லே பென் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். முதன் முறையாக தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிகார பீடத்திற்கு வரும் அளவிற்கான வாக்குகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. இந்த முறை வெற்றி பெற்று பிரதமர் பதவியை நேஷனல் ரேலி கட்சி பெற்றால், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் அதிபர் தேர்தலில் மரைன் லே பென் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால், அறுதிபெரும்பான்மை பெற்றால் மட்டுமே பிரதமர் பதவியில் அமருவேன் என்றும், தான் அதிபரின் உதவியாளராக இருக்க விரும்பவில்லை என்றும் ஜோர்டான் பர்டெல்லா தெரிவித்து இருக்கிறார்.  

நடப்பு நாடாளுமன்றத்திலும் இம்மானுவேலுவின் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. 250 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தார். எப்போதுதேல்லாம் மசோதா தாக்கல் செய்யப்படுகிறதோ அப்போது மற்ற கட்சிகளின் உதவியும் இம்மானுவேலுவுக்கு தேவைப்பட்டது. இந்த  நிலையில், தற்போது 88 இடங்களை மட்டுமே வைத்து இருக்கும் நேஷனல் ரேலி கட்சிக்கு இரண்டாம் சுற்று முடிந்த பின்னர் 260 இடங்கள் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

asianetnews



 



Post a Comment

Previous Post Next Post