வாயால் வாங்கி கட்டி கொண்ட மகாவிஷ்ணு விடுதலை! காலில் விழுந்த சிஷ்யைகள்.. கண்ணை மூடி ஆசி! ஒரே வார்த்தை

வாயால் வாங்கி கட்டி கொண்ட மகாவிஷ்ணு விடுதலை! காலில் விழுந்த சிஷ்யைகள்.. கண்ணை மூடி ஆசி! ஒரே வார்த்தை

சென்னை : மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகவும் அரசு பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசியதாக கைதான பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த மகாவிஷ்ணு இன்று சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பூ தூவி வரவேற்பு கொடுத்த ஆதரவாளர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, கண்ணை மூடி ஆசீர்வதித்தார் விஷ்ணு.

பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கர், அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மகாவிஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 192, 196 (1) ஏ, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்திரேல்வியாவில் இருந்து தமிழகம் திரும்பிய மகாவிஷ்ணுவை கைது செய்த சைதாப்பேட்டை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிபதி மகாவிஷ்ணுவை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் மகாவிஷ்ணு அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து 3 நாட்கள் மகாவிஷ்ணுவை விசாரிக்க அனுமதி கிடைத்தது. இதனையடுத்து திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், தான் தவறு செய்யவில்லை என்றும் சித்தர்கள் தன்னிடம் சொன்னதை பேசியதாகவும் மகாவிஷ்ணு கூறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை எனவும், அவ்வாறு புண்படுத்தி இருந்தால் தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். மேலும் எனது முழு பேச்சை கேட்காமல், எனது பேச்சை எடிட் செய்து ஒளிபரப்பி உள்ளனர். எனக்கு எதிராக அரசியல் அழுத்தம் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுவரை நடந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறேன். எனது ஆவணங்கள், வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் போலீசாரிடம் உள்ளது. எனவே ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதை அடுத்து இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் மகாவிஷ்ணுவுக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கினார்.

இந்த நிலையில் சிறை நடைமுறைகள் முடிந்து இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாவிஷ்ணு ஜாமினில் வெளிவந்தார். அப்போது அங்கு பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், மகாவிஷ்ணுவின் ஆதரவாளர்கள் திரண்டு நின்று, மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் பூக்களை தூவியும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து பல அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். சிறுமிகளுக்கு கண்ணை மூடி ஆசி வழங்கிய விஷ்ணு இன்னும் பல உயிர்களுக்கு நாம் சேவை செய்வோம் என கூறினார். அப்போது ஆதரவாளர் ஒருவர் மகாவிஷ்ணு வாழ்க எனக் கூற சிறையில் அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று கூறி அங்கிருந்து வெளியேறினார் மகாவிஷ்ணு.

oneindia



 



Post a Comment

Previous Post Next Post