Ticker

6/recent/ticker-posts

உ.பி அரசு மருத்துவமனையில் தீவிபத்து... 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு


உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்றிரவு 10.35 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் தீயில் கருகியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 44 பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. அதில், 16 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அருகே உள்ள அறையில் ஏராளமானோர் சிக்கிக் கொண்ட நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் ஜன்னல்களை உடைத்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்தனர். குழந்தைகள் உயிரிழந்ததைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

முதல் கட்ட விசாரணையில், அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து 12 மணி நேரத்தில் அறிக்கை அளிக்கும்படி, 2 காவல் உயர்அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments