
ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் கடந்த மார்ச் 21 அன்று பெய்த கனமழையினால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், இரு இந்தியர்கள் பயணித்த கார் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவர்களைச் சாதுர்யமாக மீட்டுள்ளார்.
மஸ்கட்டிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள 'விலாயா பர்கா' எனும் பகுதியில் இந்த அதிரடி மீட்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பலத்த மழையினால் பாலத்தின் அடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, அங்கிருந்த கார் ஒன்று நீரோட்டத்தில் சிக்கி மிதக்கத் தொடங்கியது. பாலத்தின் மேலிருந்து பொதுமக்கள் இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அப்போது, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த ஷஸாத் கான் என்ற இளைஞர், எவ்வித அச்சமுமின்றி வெள்ளத்தில் குதித்து காரை நோக்கி விரைந்தார்.
அதிவேகமாகப் பாய்ந்த வெள்ளத்தில் கார் ஒரு பாலத்தின் தூணில் மோதி நின்ற தருணத்தில், ஷஸாத் கான் காரின் கதவைப் பலவந்தமாக உடைத்து உள்ளே சிக்கியிருந்த இருவரையும் பத்திரமாக வெளியே இழுத்து வந்தார்.
Video of 25 year old Pakistani Shahzad Khan rescuing Indians trapped in a flood in Barka, Oman. pic.twitter.com/dDRMDjBqYf
— Taimoor Zaman (@taimoor_ze) March 25, 2026
உயிரைப் பொருட்படுத்தாது அவர் செய்த இந்த மனிதாபிமானச் செயல் அங்கிருந்தோரை நெகிழ வைத்தது. மீட்கப்பட்ட இருவரும் இந்தியப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷஸாத் கானின் இந்த வீரதீரச் செயல் தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எல்லைகளையும் நாடுகளையும் கடந்து, ஒரு மனித உயிரைக் காப்பாற்ற அவர் காட்டிய துணிச்சலைப் பாராட்டி, உலகம் முழுவதுமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com







0 Comments