
அமெரிக்கா ஈரானை ஒரு பலவீனமான நாடாகக் கணித்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் பில்லியன் டாலர் பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் பினிக்ஸ் பறவையாக மீண்டெழுந்திருப்பது, மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரச் சமநிலையை மீண்டும் ஒரு பதற்றமான புள்ளிக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ஏவுதளங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்தன. எனினும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ள 6 வார கால தற்காலிக போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி, ஈரான் தனது ராணுவப் பலத்தை அதிவேகமாக மீட்டெடுத்து வருகிறது.
அமெரிக்கா போட்ட தப்புக் கணக்கு!
Operation Epic Fury என்ற ராணுவத் தாக்குதலில், தலைநகர் டெஹ்ரானை சுற்றியுள்ள ராணுவத் தொழிற்சாலை உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. இது மட்டுமல்லாமல், ஈரானின் கடலோரப் பாதுகாப்பு உளவு ஏவுகணை தளங்களும் இலக்கு வைத்து அழிக்கப்பட்டன. தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் Mobile Launchers அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பதுங்கு குழி அழிப்பு குண்டுகள் மூலம் தாக்கப்பட்டன. ஈரானின் ஏவுகணை தளங்களும் டிரோன் தொழிற்சாலைகளும் கடுமையாகச் சேதமடைந்ததால், அவர்கள் தங்களின் பழைய ராணுவ வலிமையை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது.
அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டதாலும், சர்வதேச தடைகள் தீவிரமாக்கப்பட்டதாலும், ஏவுகணைகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை ஈரானால் இறக்குமதி செய்ய முடியாது. இதனால் ஆயுத உற்பத்தி முடங்கும் என அமெரிக்கா தப்புக் கணக்கு போட்டது.
ஈரானின் முக்கிய பலமான டிரோன் அசெம்பிளி பிரிவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதால், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அச்சுறுத்தல் குறைந்துவிடும் என அமெரிக்கா கருதியது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, இந்த மீட்சி "வெகு சில மாதங்களிலேயே" சாத்தியமாகும் என்று அமெரிக்காவின் புதிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது. ஈரான் ஏற்கெனவே தனது டிரோன் உற்பத்தியை மீண்டும் தொடங்கிவிட்டது.
ஈரானிடம் இருக்கும் ஏவுகணைகள்!
தற்போதைய போர்நிறுத்தக் காலத்திற்குப் பிறகும் ஈரானிடம் ஆயிரக்கணக்கான டிரோன்கள் மற்றும் பெருமளவிலான கடலோரப் பாதுகாப்பு உளவு ஏவுகணைகள் சேதமடையாமல் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்னும் 6 மாதங்களுக்குள் ஈரான் தனது முழுமையான டிரோன் தாக்குதல் திறனை எட்டிவிடும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளனர். ஈரான் இவ்வளவு விரைவாக மீள்வதற்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மறைமுக ஆதரவே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. சீனா, ஏவுகணை தயாரிப்பிற்குத் தேவையான உதிரிபாகங்களை ஈரானுக்கு தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
Operation Epic Fury மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலும், சீனா ஈரானுக்கு ஏவுகணை தயாரிப்பிற்குத் தேவையான அத்தியாவசிய உதிரிபாகங்களை வழங்கி வந்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. ஆனால் சீனாவிடமிருந்து கிடைத்த தொழில்நுட்ப பாகங்களைக் கொண்டு, ஈரான் தனது ஏவுகணை ஏவுதளங்களையும் உற்பத்தி அலகுகளையும் சில மாதங்களிலேயே மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஈரானின் 'ஷாஹித்' (Shahed) போன்ற டிரோன்களுக்கு தேவையான மைக்ரோசிப்கள், Guidance Systems மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் சீன நிறுவனங்கள் மூலம் ரகசியமாக விநியோகிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு கடல்வழி விநியோகத்தை முடக்கிய போதிலும், சீனா, தரைவழி மற்றும் வான்வழிப் பாதைகள் மூலம் ஈரானுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வந்தது.
இதுவே அமெரிக்க உளவுத்துறை கணித்ததை விட மிக வேகமாக ஆயுதங்களை உற்பத்தி செய்ய வழிவகுத்துள்ளது. ஈரான் இவ்வளவு வேகமாக மீள்வதற்குச் சீனா அதிகாரப்பூர்வமாக உதவவில்லை என்று கூறினாலும், பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான விஷயமும் உள்ளது.
பின்னணியில் இருக்கும் சீனா!
ஈரானிய ராணுவப் பொறியாளர்கள் உடைந்த ஏவுகணை பாகங்களை வைத்துக்கொண்டு, சீனாவிடமிருந்து ரகசியமாகப் பெறப்பட்ட மைக்ரோசிப்கள் மற்றும் மின்னணுப் பொருட்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் 'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' (Reverse Engineering) முறையில் புதிய ஏவுதளங்களை உருவாக்கியுள்ளனர். அதாவது சந்தையில் கிடைக்கும் சாதாரண சீன தொழில்நுட்பப் பொருட்களை வைத்தே ஈரான் தனது ராணுவத்தை மறுசீரமைத்து வருகிறது.
சீனாவின் இந்த மறைமுக ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவுதான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களையும் தாண்டி ஈரான் தடம் மாறாமல் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. சீனாவைப் போலவே, ரஷ்யாவும் ஈரானுக்கு பெருமளவு உதவி செய்துள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவும் ஈரானும் தங்களுக்குள் டிரோன் தொழில்நுட்பங்களை பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டு அமைப்புகளின் மேம்பாட்டில் ரஷ்யா ரகசியமாக உதவுவதாக அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் இஸ்ரேலின் ராணுவ நகர்வுகளை அதிநவீன உளவு அமைப்புகள் மூலம் கண்காணித்து, அந்தத் தரவுகளை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. இது ஈரான் தனது எஞ்சிய ராணுவ தளங்களைப் பாதுகாக்கவும், ரகசியமாக மறுசீரமைப்புப் பணிகளைச் செய்யவும் உதவுகிறது. அமெரிக்க கடற்படை தெற்கே இருக்கும் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ளதால், ஈரான் தனது வடக்கு எல்லையான காஸ்பியன் கடல் (Caspian Sea) வழியை ஆயுத மறுசீரமைப்புக்குப் பயன்படுத்தி வருகிறது.
ஈரானின் Phoenix Strategy:
ரஷ்யாவிலிருந்து வரும் சரக்குக் கப்பல்கள் தங்களின் 'Automatic Identification System' (AIS) அமைப்புகளை முழுமையாக அணைத்துவிட்டு, நள்ளிரவில் ஈரானிய துறைமுகங்களில் ஆயுத உதிரிபாகங்களை இறக்கிவிட்டுச் செல்கின்றன. ரஷ்யாவின் இந்தச் செயலை அமெரிக்காவால் தடுக்க முடிவதில்லை. சர்வதேச அரசியல் மற்றும் ராணுவப் பகுப்பாய்வாளர்கள் ஈரானின் இந்த அதிவேக மீட்சியை "The Phoenix Strategy" என்றே வர்ணிக்கிறார்கள்.
The Phoenix Strategy நவீன கால Asymmetric Warfare-ன் ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். அமெரிக்கா போன்ற உலகின் அதிசக்திவாய்ந்த ராணுவங்களை எதிர்கொள்ளும் போது, ஒரு நாடு எவ்வாறு தனது பரவலாக்கப்பட்ட கட்டமைப்பு, ராஜதந்திர நிதானம் மற்றும் தகவமைப்புத் திறன் மூலம் மீண்டும் உயிர்த்தெழ முடியும் என்பதை இந்த உத்தி விளக்குகிறது.
ராணுவப் பகுப்பாய்வுகளின்படி, ஈரானின் இந்த "ஃபீனிக்ஸ் உத்தி" நான்கு முக்கிய தூண்களைக் கொண்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட உற்பத்திக்கு மாற்றாக 'பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்' அதாவது Decentralization. பாரம்பரிய ராணுவக் கோட்பாடுகள் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட ராணுவத் தளங்களையே நம்பியிருக்கும். இதனால், இவை நவீன குண்டுகளுக்கு எளிதான இலக்காகிவிடும். ஈரான் இதற்கு மாற்றாக, தனது ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையையும் சிறிய சிறிய துண்டுகளாகப் பிரித்து நாடு முழுவதும் பரவலாக்கியது.
டிரோன் அசெம்பிளி மற்றும் ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிப்பை சிறிய மொபைல் யூனிட்டுகளாக மாற்றி, நிலத்தடி பதுங்கு குழிகளிலும், மக்கள் நடமாட்டம் உள்ள சாதாரண பகுதிகளிலும் பிரித்து வைத்துள்ளது. இதனால் ஒரு பெரிய தளம் அழிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் முடங்குவதில்லை. COTS Technology என அழைக்கப்படும் சாதாரண வணிகத் தொழில்நுட்பங்களைப் ஈரான் பயன்படுத்துகிறது.
அதிநவீன ராணுவங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் கிடைப்பது கடினம். ஈரான் இந்தத் தடையை 'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' மூலம் உடைத்தது. இந்த Technic ஆயுத உற்பத்திக்கான செலவை மிகக் கடுமையாகக் குறைத்தது. பினிக்ஸ் உத்தியின்படி, ஈரான் அமெரிக்காவின் விமானப் படைக்கோ அல்லது கடற்படைக்கோ இணையாகப் போர் விமானங்களையோ, போர்க்கப்பல்களையோ தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.
அமெரிக்காவிற்கு அதிகரிக்கும் அழுத்தம்!
அமெரிக்கா மீண்டும் தாக்க நினைத்தால், அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும் என்ற அச்சுறுத்தலை மட்டும் தக்கவைத்தால் போதும். தங்களின் 50% டிரோன் படைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலமும், ஹார்முஸ் நீரிணையில் ரகசிய ஏவுகணைகளை நிலைநிறுத்துவதன் மூலமும், உலகளாவிய எரிசக்தி சந்தையையும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் தங்களால் நினைத்த நேரத்தில் அச்சுறுத்த முடியும் என்பதை ஈரான் உறுதி செய்துள்ளது.
நவீன போர்களில் வெறும் கட்டிடங்களையும் உள்கட்டமைப்புகளையும் அழிப்பதன் மூலம் ஒரு நாட்டின் ராணுவத் திறனை முழுமையாக ஒழித்துவிட முடியாது என்பதை "ஃபீனிக்ஸ் ஸ்ட்ராடஜி" நிரூபிக்கிறது. இப்படி ஈரான் ஒரு புறம் மீண்டு கொண்டிருக்க, இந்த போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 2.4 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.
கேள்விக்குறியான அமெரிக்க வான்படை!
அமெரிக்க ராணுவ வரலாற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த தொகை மிகக் குறைவுதான். ஆனால், எந்தப் போரிலும் வெறும் 40 நாட்களில் இத்தனை நவீன போர் விமானங்களை அமெரிக்கா இழந்தது இல்லை. வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்கா ஒரே மாதத்தில் 42 வான்வழிச் சொத்துக்களை ஈரான் போரில் இழந்துள்ளது. குறிப்பாக, உலகின் அதிநவீன F-35A ஸ்டீல்த் போர் விமானம் சேதமடைந்ததும், MQ-4C டிரைடன் போன்ற 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள உளவு டிரோன் வீழ்ந்ததும் அமெரிக்க வான்படையின் பலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒரு உளவு விமானத்தையும் சேதப்படுத்தியது
ஈரான்- அமெரிக்கா மோதல் வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான போர் மட்டுமல்ல; பிரம்மாண்டமான Conventional Might-க்கும், வளைந்துகொடுக்கும் Asymmetric Resilience-க்கும் இடையே நடக்கும் மோதல். இதில் ஈரான் பினிக்ஸ் பறவையாக மீண்டெழுந்திருப்பது, மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரச் சமநிலையை மீண்டும் ஒரு பதற்றமான புள்ளிக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments