
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று தான் 'இன்னா நாற்பது'. மக்களை நல் வழிப் படுத்தும் அறவுரைகள் 40 வெண் பாக்களில் வடித்துக் கொடுக்கப் பட்டுள்ளன. துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு. இதில் இந்து சமயக் கடவுளர்களான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது.
அருமையான இந்த பாடல்களை இயற்றித் தந்தவர் புலவர் கபிலர். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவை என்ற பெயரில் பல புலவர்கள் வாழ்ந்தது போல, கபிலர் என்ற பெயரிலும் பல புலவர்கள் இருந்துள்ளனர். இன்னா நாற்பது எழுதிய புலவர் கபிலருக்கு முன்பும், கபிலர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கிறார்கள்.
இப் பாடலைத் தவிர்த்து, மற்ற பாடல்களில், இறை என்னும் பொருள் குறித்தோ, இறை வழிபாடு குறித்தோ எந்த கருத்துக்களும் இடம் பெறவில்லை. எனவே இந்த கடவுள் வாழ்த்துப் பாடல் கூட, பிற்கால இடைச் செருகலாக இருக்கலாம் என நினைக்க முடிகிறது.
வாழ்வில் எவையெவை எல்லாம் துன்பம் தரும் என்பவற்றை 'இன்னாதவை' எனக் குறிப்பிட்டு இந் நூலில் சொல்லப் பட்டுள்ளது. இன்னாதவை என்பவை பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை', அல்லது ‘தகுதியற்றவை' அல்லது 'துன்பம் தருபவை’ என்றோ பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு இன்னா நாற்பது பாடலிலும் நான்கு துன்பம் தரக்கூடிய கருத்துகள் கொடுக்கப் பட்டுள்ளன.
இன்னா நாற்பது கூறுவது 160 அறநெறிகள். அவற்றில் சில தனி மனிதருக்கு என்றும், சில அரசாங்கங்களுக்கு என்றும், மற்றவை பொதுவானவை என்றும் புரிந்து கொள்ளலாம். பல வகை அறிவுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இன்னா என்ற சொல் இடம் பெறுவதால் இந்த நூல் இன்னா நாற்பது என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.
ஒரு சில கருத்துகள், இப்போது பொருத்தமில்லமல் இருக்கலாம். அவற்றின் மூலம் அந்தக் கால வாழ்வியல் முறைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. சில பாடல்களில் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நூலின் கருத்துகள் ஆணின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ளது. ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தான் கூறப்படுகிறது. ஆனால் ஒரு கணவனின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இந்த நூலில் இடம் பெறவில்லை.
கடவுள் வாழ்த்து.
முக்கட் பகவ னடி தொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
விளக்கம்:
- மூன்று கண்களையுடைய சிவனை வணங்காதவர்களுக்கு துன்பம் சேரும்.
- பனைக் கொடியை உடைய பல ராமனை நினைக்காமல் இருப்பது துன்பம் தரும்.
- திருமாலை மறப்பது துன்பம் தரும்.
- முருகக் கடவுளை தொழாமலிருப்பது துன்பம் தரும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments