அப்பாவி மக்கள் 40 பேரை இராணுவ வீரர்கள் அடித்து, சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவம்-மியான்மரில் கொடூரம்

அப்பாவி மக்கள் 40 பேரை இராணுவ வீரர்கள் அடித்து, சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவம்-மியான்மரில் கொடூரம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி மக்கள் 40 பேரை இராணுவ வீரர்கள் அடித்து, சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இராணுவ எதிர்ப்பாளர்களின் கோட்டையாக கருதப்படும் கானி நகரில் உள்ள பல கிராமங்களுக்குள் புகுந்து இராணுவம் தனது கோர முகத்தை காட்டியுள்ளது.

இராணுவத்தின் இந்த வெறியாட்டத்தில் தங்கள் கண்முன்னே உறவுக்காரர்களை பறிகொடுத்த பெண்கள் சிலர் இது குறித்து கண்ணீர் மல்க கூறியதாவது:-

17 முதல் 18 வயதுக்குட்பட்ட இராணுவ வீரர்கள் பலர் கிராமங்களுக்குள் புகுந்து 40 ஆண்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை வெவ்வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களின் கை, கால்களை கட்டி அடித்து சித்திரவதை செய்தனர். எங்களால் இதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை, அதனால் நாங்கள் தலைகுனிந்து அழுதோம். அதைச் செய்ய வேண்டாம் என்று நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

அவர்கள் எங்களிடம், ‘‘உங்கள் கணவர்கள் அவர்களில் இருக்கிறார்களா அவர்கள் இருந்தால், உங்கள் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்' என்று கூறினர். பின்னர் அவர்கள் குழிகளை தோண்டி, அடித்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை அதில் போட்டு புதைத்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தற்போது அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இராணுவம் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் கிராம மக்கள் 11 பேரை உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post