ஏதோ ஒரு நேயத்தின்
அவலக்குரல்
எப்போதும்
என் காதுகளை
கிழித்த வண்ணம்....
என்னால்
கற்பழிக்கப்பட்ட
காதல் நாடகமொன்றின்
மௌனக் கதறலாகவும்
அது இருக்கலாம்.
இல்லை
நேசத் தூதகனால்
நியாயம் இல்லாமல்
நசுக்கப்பட்ட
உண்மை நேசத்தின்
ஊமை ஒப்பாரியாகவும்
அது இருக்கலாம் .
இல்லை
எழுத்துப் பிழையாகி
இத்தனை வருடம்
கழிதலிலும் மறப்பதில்லையென
மரணத்தின் ரணம்
சுமக்கும் நெஞ்சமொன்றின்
வாய்த்திறனற்ற விம்மலாகவும்
அது இருக்கலாம்.
ஓசையுறும் போதெல்லாம்
உயிர்காக்கத் துடித்தலையும்
என்னைச் சுற்றி
நிறைகிறது
உருகும் புன்னகை.
இத்தனைக்குப் பின்னும்
மன்னிக்கும்
மனமிருந்தால்
ஓயாமல் உள்ளிருந்து
வதை செய்யாதே
இயலாமைப் பேரலைகள்
உயிர்தின்னக்
காத்துக் கிடக்கின்றன.
Tags:
Pen Club-கவிதைகள்
வாய்ப்பளித்த வேட்டை க்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்..
ReplyDeleteஒங்கட்டும் உங்கள் தமிழ்பணி
வாழ்க...
வளர்க...