திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-17

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-17


குறள் 613 
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

மாப்ள..  விடா முயற்சி ங்கிற பழக்கம் இருக்க எல்லா ஆளுங்க கிட்டயும், மத்தவொளுக்கு ஒதவுத பண்பு இருக்கும். 

குறள் 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை 
வாளாண்மை போலக் கெடும்.

விடாமுயற்சி, ஊக்கம்... இப்பிடி எதுவும் இல்லாத ஒதவாக்கரை ஒருத்தனை ஒதவிக்கு வச்சுகிட்டா எப்படி இருக்குந் தெரியுமா மாப்ளை..

கையில வாளை வச்சுருக்க சோப்ளாங்கி ஒருத்தன், பேருக்கு நாட்டாமை பண்ணுத மாதிரி தான் மாப்ளை இருக்கும். 

குறள் 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

மாப்ள .. தங்களோட  நலத்தைப் பெருசா எண்ணிப் பாக்காம, எடுத்திருக்க வேலையை நல்ல செஞ்சு முடிய்க்க கொஞ்ச பேர் நெனைப்பாங்க. இந்த மாதிரி ஆளுங்க, தங்களைச் சுத்தியிருக்க சொந்தக்காரங்க, நண்பர்கள் என்று எல்லோரோட துன்பத்தையும் துடைச்சு, அவங்களை தாங்கிப்பிடிக்கக் கூடிய தூணா இருப்பாங்க. 

குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மாப்ள... நாம கும்புடுத சாமியோட ஒத்தாசை இருந்தாக் கூட  ஒரு சோலி  நடக்காமப் போயிறலாம். 
ஆனா நம்மளோட ஒடம்பை சங்கடப்படுத்தி நாம எடுக்க முயற்சி இருக்கே.. அதுனால வரும் ஒடம்பு வலிக்கு ஏத்தாப்புல ஒரு நன்மை கட்டாயம் கெடைய்க்கும் மாப்ள. 

குறள் 621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

ஏல மாப்ள.. நமக்கு தும்பம் எதாவது வந்துச்சுன்னா, அதப்பாத்து அசந்திரப்படாது. சிரிச்சுக்கிட்டே சமாளிக்கணும் டே..
வந்த தும்பத்தை வெரட்டியடிக்க, இதைவிட வேற ஒசத்தியானது எதுவுங் கெடையாதுடே. 

குறள் 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

மருமவன. தும்பங்கிறது நமக்கு வரத்தான் செய்யும். கவலைப்பட்றப்படது. அதை துணிஞ்சு எதித்து ஒரு கை பாத்திறணும். நாம போடுத போடுல, அந்த தும்பமே தும்பப்பட்டு நம்மட்டயிருந்து தப்பிச்சா போதும்ணு ஓடிறும். 

குறள் 625 
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

மாப்ள.. அடுத்தடுத்தால துன்பங்கள்லாம் வரத்தான் செய்யும். அதைப் பாத்து அசராம இருக்க திறமை மட்டும் நம்ம கிட்ட இருந்துச்சுன்னா மாப்ள, அந்த துன்பமே துன்பப்பட்டு நம்மை விட்டு ஓடிப் பொயிரும்.
(தொடரும்) 




Post a Comment

Previous Post Next Post