இவை போதும் எனக்கு...!

இவை போதும் எனக்கு...!


குதறிக் கிழிக்கும்
உறவுகள் வேண்டாம்..
குற்றம் காணும் மனங்களும் வேண்டாம்..

வாரிக் கொடுக்கும் உள்ளம்
போதும்..
ஏழைகளின் அன்பில்
குளிர்த்தல் போதும்..

கண்ணீர் துடைக்க 
கரங்கள் போதும்..
துன்பம் என்னை
அணைக்கும் போது
தேற்ற நல்ல வார்த்தைகள் போதும்..

நிறைகளைக் கண்டு
பொறாமை கொள்ளா
நல்ல நட்பே என்றும் போதும்..

முதுமை என்னை 
அணைக்கும் போது
கருத்தாழம் மிக்க
புத்தகங்கள் போதும்..

தோள் கொடுக்க நல்ல
தோழமை போதும்..
தீமைகளைத் தடுத்து
நன்மை செய்யும்
உள்ளம் போதும்..

துயரினை உண்ணும்
முதிர்கன்னியின் 
துன்பம் போக்கும்  
நற்குணம் போதும்..

கல்வித்தாகம் கொண்டு
அலையும் கண்மணிகளுக்கு
இலவச கல்வி கொடுக்கும்
மனமே போதும்..

மாற்றுத் துணியில்லா
மனிதரிற்கு உடை கொடுக்கும் 
உன்னதமனம் போதும்..

பாதகச் செயலைக் கண்டால்..
தட்டிக் கேட்கும்
தைரியம் போதும்..

வீசியெறியும் வார்த்தைகள்
கண்டால்..
விவாதம் செய்யா உள்ளம்
போதும்..

வீதியில் கிடக்கும்
குப்பைகளை..
விரல்களால் விலக்கும்
நல்லமனம் போதும்..

வஞ்சகமில்லா நெஞ்சம்
போதும்..
வரம்பு மீறா நன்னடத்தை
போதும்..!

போதும் போதும்
இவை போதும்..
இறை பொருத்தத்தோடு
வாழும் வாழ்வே போதும்..




Post a Comment

Previous Post Next Post