குறள் 668.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
மாமா.. நாலையும் யோசிச்சுப் பாத்த பொறவு தான இந்த சோலியை செய்யணும்னு முடிவெடுத்திய.
மேக்கொண்டு சொணக்கமில்லாம, சட்டு புட்டுன்னு அந்த சோலியை செஞ்சு முடிக்க வளியைப் பாருங்க மாமா.
குறள் 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
ஏல மாப்ள... ஒரு நல்ல தூதுர் எப்படி இருக்கணும்னு தெரியுமா டே?
சொல்ல வேண்டிய தகவலை நல்ல தொகுத்து கோர்வையா சொல்லணும்.
தேவையில்லாத தகவல்களை சொல்லாம ஒதுக்கிறணும்.
பயன் கிடைக்கிற மாதிரியும், எதிராளியுடைய மனம் குளிரும் படியும், இனிமையான சொற்களை பயன் படுத்தணும்.
இது தான் நல்ல தூதருக்கு அழகு.
குறள் 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
கொஞ்சம் பொறுத்துச் செய்யலாம் ங்கிற வேலையை காலம் தாழ்த்தி செய்யலாம். அதுல எந்தத் தப்புமில்லை மாப்ள.
ஆனா ஒடனே செஞ்சு முடிக்க வேண்டிய எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடவே கூடாது மாப்ள.
குறள் 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
குளிர் காலத்துல ஒடம்பை சூடேத்திக் கொள்ளும் போது கவனமா இருக்கணும் மாப்ள. நெருப்புக்கு ரொம்ப பக்கத்துல போனா சுட்டுறும். நெருப்பை விட்டு ரொம்பவும் வெலகி இருந்தா, குளிர் போவாது. இது மாதிரி தான் மாப்ள, சில விவரமானவங்க, நிர்வாகத் தலைமைக்கிட்ட ரொம்ப நெருக்கமாவும் இருக்க மாட்டாங்க, விலகியும் இருக்க மாட்டாங்க.
குறள் 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
பளிங்குக் கல்லு இருக்க.. அது நம்ம பக்கத்துல இருக்க ஒரு பொருளையோ, ஆளையோ, நமக்கு ரொம்ப துல்லியமா காமிக்கும்.
அது மாதிரிதாம் மாப்ள...
ஒரு ஆளோட மொகம், அவொ மனசுக்குள்ள என்ன ஓடுதுங்கிறதை அடுத்தவொளுக்கு, அப்பிடியே காட்டிக் குடுத்துறும் மாப்ள.
குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
மாப்ள.. நீ யார்ட்ட பேசுத.? என்ன பேசுனா அவொளுக்கு விளங்கும்னு புரிஞ்சிக்காம, ஒனக்குத் தோணுத மாதிரி பேசுனன்னு வச்சுக்க, ஒண்ணு உறுதி. என்ன பேசுதன்னு ஒனக்கே தெரியல. இன்னொண்ணு ஒனக்குப் பேச்சுத் திறமையும் இல்லை மாப்ள.
(தொடரும்)
--------------------------------------------
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
Tags:
செந்தமிழ் இலக்கியம்