சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-4

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-4


நம் வாழ்க்கை நம் கையில்

மனிதன் நலத்துடனும், வளத்துடனும் வாழ, அவனுக்கு வேண்டிய ஆற்றலை, அறிவை, வலிமையை அவனுக்குள்ளேயே வைத்துள்ளான் இறைவன். அதன் இயங்கு சக்தியைப் பயன்படுத்தாமலும், குறைவாகப் பயன்படுத்தியும் வாழ்ந்துவிட்டு,"இப்படி ஆகும்னு தெரியாமல் போயிடுச்சே..." என்று நாம் தான் மனம் புழுங்குகின்றோம்.

உன் செயல் தூய்மையானதாக இருந்தால், அது நீ விரும்பிய நன்மை எல்லாம் தரும் என்கிறார், திருவள்ளுவப் பேராசான். இதோ அவர் கூற்று.

துணை நலம் ஆக்கம் தரூஉம்வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். (குறள். 651) “அறிவு, ஆற்றல், அனுபவம் மிக்க நல்லோர் துணை உனக்கு முன்னேற்றம் தரும். ஆனால், நாம் மேற்கொண்ட நல்ல செயல்பாடுகளோ நமக்கு விரும்பிய நன்மை எல்லாம் தரும்” என்கிறார்.

உண்மையில் நமக்கான வாழ்க்கையை நாம் தான் நிர்மானிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமைகளில் மிகவும் சிறிதளவு மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையை நாம் வாழ வேண்டிய சூழல் வரும் போது, அதிர்ச்சி அடைகிறோம்!

இதோ ஒருவாழ்வியல் சான்று...

ஒரு வயதான மேஸ்திரி வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம், முதலாளியான கான்ட்ராக்டரிடம் தன் முடிவை அவர்சொல்ல... தன்னுடைய நீண்ட கால நல்ல ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம். 

சில விநாடிகள் யோசித்தவர், "எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?” இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும்கட்டி முடித்துக் கொடுப்பீர்களா? என்று பணிவோடு கேட்டார். சரி என்று மேஸ்திரி அதற்குச் சம்மதித்துப்பணியைத்தொடங்கிவிட்டார்.

ஆனால், அவரால் முழு ஈடுபாட்டோடு அப்பணியில் கவனம் செலுத்த முடியவில்லை . ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில் ஏனோதானோ என்று வீடு கட்டினார். “நாம் தான் இனி வேலையிலிருந்தே ஓய்வு பெறப்போகிறோம். இனி இந்த வீட்டை ஒழுங்காகக் கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிற? என்கிற அலட்சிய மனப்பாங்கு...

ஒரு வழியாக வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு , அந்த வீட்டைப் பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்றார் மேஸ்திரி. சந்தோசமாக அந்த வீட்டுச்சாவியை எடுத்து மேஸ்திரியிடம் நீட்டி, “இந்தாருங்கள்... இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு ! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் அக்கறையுடன் வேலை பார்த்ததற்கான வெகுமதி. பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. என்ன கொடுமையடா இது ! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையைக் கசக்கி எப்படியல்லாமோடிசைன், டிசைனாகக்கட்டி இருப்பேனே... இருப்பதிலேயே உயர்தரமான பொருட்களைப் பயன்படுத்தி இருப்பேனே ! சே ! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே என ஏகமாகப் புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நம்பழுக்கம் கூட இந்த ரகத்தில் தான் இருக்கிறது. நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம் தான் மேஸ்திரி. நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விசயங்களும் தான், நாளை நாம் வாழப் போகும் “வாழ்க்கை " எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனையைத் தரும் என்பது யாருக்குத் தெரியும். வாழ்க்கைப் பாதையைக் குறள் காட்டுகிறது. அதன்வழி நடப்போம்! உயர்வோம் ! மனம் நிறைவோம்!நலம்வற்று நீடுவாழ்வோம்!.(தொடரும்)



Post a Comment

Previous Post Next Post