JNU தமிழ் மாணவர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் : ABVP-யின் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம்!

JNU தமிழ் மாணவர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் : ABVP-யின் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம்!

இந்தியாவின் அறிவுசார் கொடை மையமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் விளங்குகிறது. இப்பல்கலைக்கழகம்தான் நாட்டில் உள்ள தலைசிறந்த வல்லுநர்கள் உருவாக்கியது. கல்வி மட்டுமல்லாது சமூக அக்கறையிலும் இப்பல்கலைக்கழகம் சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறது.

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் நிகழும் கல்விக் கட்டணக் கொள்கைக்கு எதிராகவும், அரசின் தவறான கொள்கை முடிவுக்கு எதிராகவும் போராடி வெற்றிக் கண்ட வரலாறு இப்பல்கலைக்கழகத்திற்கு உண்டு.

மேலும் ஜே.என்.யூ-வில் பலதரப்பட்ட அரசியல் சிந்தாந்த மாணவர்கள் ஒன்றாக பயின்று, தங்களின் சித்தாந்தத்தை அறிவுசார் தளமாக உருவாக்கி அரசியல் தீர்வுகளை முன்வைக்கும் பழக்கம் இப்பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் உண்டு.

அந்தவகையில் முற்போக்கு இடதுசாரி, பெரியாரி - அப்பேத்கர் போன்ற அரசியல் சித்தாந்தத்தோடு இயங்கும் மாணவர்களுக்கு தனித்தனியே அமைப்புகளுக்கும் உண்டு. அந்த அமைப்புகளின் சார்பில் அவ்வபோது கருத்தரங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டும்.

அதேவேளையில், அறிவுசார் தளத்தில் மோதி வெல்வதற்கு பதிலாக பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி தொடர்ந்து சாதி - மத ரீதியான கருத்துகளை முன்வைத்து மாணவர்கள் மத்தியில் மோதல்போக்கை உண்டாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடிய இடதுசாரி மாணவர் அமைப்பின் மீது, ஏ.பி.வி.பி-யினர் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, கடும் கண்டனங்களுக்குள் உள்ளானது.

இப்பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையை தூண்டும் ஏ.பி.வி.பி அமைப்பினருக்கு பா.ஜ.க அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி-யினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என்.யூ-வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தி நடத்தியுள்ளனர். அப்போது கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும்.

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post