திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-119

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-119


குறள் 74. 
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
 
நம்ம கிட்ட அன்பு இருந்திட்டாலே போதும். அது மத்தவங்கோளோட சேர்ந்து இருக்கணும்ங்கிற மனசைத் தரும். அப்படிப்பட்ட மனசு, நட்புங்கிற சிறப்பை உண்டாக்கும். 

குறள் 75.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இந்த ஒலகத்துல ஒருத்தங்க மகிழ்ச்சியா காலம் தள்ளுதாங்கன்னா, அதுக்கு காரணம் அவொ ஆளுங்கட்டயும் அன்பா இருக்கதுனால தான். 

குறள் 541.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

இவன் பக்கமும்  நிய்க்காம, அவம் பக்கமும் நிய்க்காம, ரெண்டு பேருக்கும் பொதுப் படையா இருந்து பேசுதது தான் சரியான முறை. 

குறள் 637. 
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

ஒரு சங்கதியைப் பத்தி அம்புட்டு வெவெரமா படிச்சுத் தெரிஞ்சு வச்சிருக்கலாம். ஆனாலும் நம்ம மண்ணுல இருக்க இயற்கையான நெலமை.. நம்ம மக்களோட வழிமுறை.. இதுல்லாம் நெறைய இருக்கும்லா? அதுக பத்தியும் நல்ல தெரிஞ்சுகிட்டு அந்த ஜோலியைச் செஞ்சு முடிக்கணும். 

குறள் 884.
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

மனசை மாத்த முடியாத அளவுக்கு, உட்பகை வரக்கூடிய எண்ணம் ஒருத்தனுக்கு வந்திட்டுன்னா, அந்த எண்ணத்துக்காகவே அவன் கூட இருக்க ஆளுங்களே வெறுக்கக் கூடிய அளவுக்கு கெடுதலை உண்டாக்கும். 

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post