இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழுங்கள்!

இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழுங்கள்!


நாம் எல்லோருமே இல்லாத ஒன்றை நினைத்து அது கிடைக்காதா என்ற கவலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுவே, நம் மனதை போட்டு ஆட்டிப்படைக்கிறது. இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைவிட இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். நம் கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்ந்து வருகிறோம். அதை விளக்கும் இந்தக் கதையைப் பாருங்கள்:

அரசன் அருணாச்சலம் தனது மந்திரியை அழைத்து, “இதோ பாருங்கள் மந்திரியாரே! நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். எனக்கு ‘இல்லை’ என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும் நான் மனநிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது. சலிப்பும் வெறுப்பும் என்னைப் பின் தொடர்கிறது.

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, அவன் என்னைவிட வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்க காண்கிறேன். ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்க பொறாமையாக இருக்கிறது” என்று ஆதங்கப்பட்டான்.

உடனே அந்த மந்திரி, “அரசே அந்தச் சேவகனிடம் 99 ஆட்டத்தைப் பரீட்சித்துப் பாருங்கள்” என்றான்.

“அது என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே?” என்றான் அரசன்.

“99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள். ‘100 பொற்காசுகள் உங்களுக்கான அன்பு பரிசு’ என்று அதிலே எழுதி வைத்துவிட்டு,  வந்து விடுங்கள். பின்பு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்,” என்றான்.

அரசனும் அப்படியே செய்துவிட்டு ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார். பொற்காசுகள் இருந்த பையைக் கண்ட சேவகன் ஆனந்தத்தில் மிதந்தான். பணப்பையை எடுத்து எண்ணிப் பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.  ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டான். அதன்படி அவனும் அவனது மனைவி, பிள்ளை குட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன் நாணயத்தைத் தேட ஆரம்பித்தனர்.  தேடித் தேடி இரவு முடிந்து பொழுதுவிடிந்தது. தேடல் மாத்திரம் முடிந்தபாடு இல்லை. கோவம் அடைந்த சேவகன் அவர்கள் மீது எறிந்து விழத்தொடங்கினான். அவன் மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது. மறுநாள் சேவகன் விரக்தி அடைந்தவனாக காணப்பட்டான். தன்னைத்தானே திட்டிக்கொண்டிருந்தான். இதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு 99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.

99 வகையான சௌபாக்கியங்களோடு நாம் இருப்பதை மறந்து, இல்லாத ஒன்றுக்காக ஏங்கி, வாழ்வில் நமக்கு கிடைக்காத அந்த ஏதோ ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து, மனவருத்தத்தோடு வாழ்ந்து வருகிறோம்; ஏங்கித் தவிக்கிறோம். இதுதான் உண்மை. நம் கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு ஏன் வாழ வேண்டும்? இருப்பதை வைத்து, மனக்கவலைகளை மறந்து, சந்தோஷமாக வாழ பழகிக்கொள்ளலாமே.

kalkionline



 



Post a Comment

Previous Post Next Post