அயோத்தியாவின் நிர்வாக குழுவில் வேறு மதத்தினரை நியமிக்க முடியுமா? : வக்ஃப் மசோதாவிற்கு வலுத்த எதிர்ப்பு!

அயோத்தியாவின் நிர்வாக குழுவில் வேறு மதத்தினரை நியமிக்க முடியுமா? : வக்ஃப் மசோதாவிற்கு வலுத்த எதிர்ப்பு!


இந்தியா கூட்டணி எம்.பிக்கள் எதிர்ப்புகளுக்கிடையே, சர்ச்சைக்குரிய வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்தார் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு.

கடந்த 10 ஆண்டுகளில், சிறுபான்மையினர் உரிமைகளையும், இஸ்லாமியர்களின் மத உணர்வுகளையும், தகர்க்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அவ்வரிசையில், புதிதாக இணைக்கப்பட்டிருப்பது தான், வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா. இம்மசோதா, நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுவதற்கு முன்பே, அதன் சில வரையறைகள் பொதுவெளியில் கசிந்தன.

இந்நிலையில், அவ்வரையறைகளில் இடம்பெற்றிருக்கிற திருத்தங்கள், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையும், மத உரிமையையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் மக்களைவையில் பேசுகையில், “வக்ஃப் திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானதாகவும், மத சுதந்திரத்திற்கு எதிரானதாகவும் அமைந்திருக்கிறது. இம்மசோதா இஸ்லாமியம் சாராதவர்களையும் இஸ்லாமிய ஆலைகளில் நிர்வகிக்க வழி வகுக்கிறது. இதே போல், அயோத்தியாவின் நிர்வாக குழுவில் வேறு மதத்தினரை நியமிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, “வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்திற்கே எதிரானது. மதச்சார்பற்ற நாடு இந்தியா என்ற நம்பிக்கையை எல்லோரும் இழந்துவிடுவார்கள். ஒருவர் மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தை சேர்ந்த ஒருவர் தலையிடுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி உறுப்பினர்கள், வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

kalaignarseithigal


 



Post a Comment

Previous Post Next Post