புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-29

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-29


குகையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, ஒர் ஒதுக்குப்புற மூலையில் கற்களுக் கிடையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தோல்பையொன்று அவனது கண்களில் பட்டது.

அதற்குள் தடித்த மட்டை கொண்ட இரண்டு புத்தகங்களும், கையெழுத்துக்களிலான குறிப்பேடொன்றும்  துண்டுக் காகிதங்களும் காணப்பட்டன!

அநேகமாக, இவை மூத்தவர் விட்டுச்சென்ற வைகளாக 
இருக்கலாமென்று அவன் ஊகித்துக் கொண்டான்.

அவை காலகாகாலமாகப் பாதுகாப்பாக இருந்தமை அவனை வியப்பிலாழ்த்தியது!

ஓரளவுக்கு வாசிக்கத் தெரிந்த அவன், அங்கிருந்த குறிப்புக்கள் ஒன்றில் காணப்பட்ட வாசகங்களைத் திக்கித் தவனாக வாசித்தான்:

நேற்று  படிக்கட்டின் மேல் கண்ட 
மனிதனைக் காணவில்லை,
அவனைக் காணவில்லை மறுபடியும்,
ஓ அவன் போனதை எப்படி யானறிவேன்?
நேற்றிரவு மூன்று மணிக்கு வீடு வந்தபோது,
அந்த மனிதன் எனக்காகக் காத்திருந்தான்,
நான் நடையைச் சுற்றிப் பார்த்தபோது,
அவனை எங்கும் காணவில்லை!
போய்விடு, இனிமேல் எப்போதும் வந்துவிடாதே!
போய்விடு, தயவுபண்ணி  இனிமேல் கதவு தட்டாதே..!

அவனுக்கு எதுவும் புரியவில்லை. எல்லாமே புதிராக இருந்தது. ஒருநாள்  இர்வினிடம் காட்டி, அவை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்று அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான்!

வழமையான சந்திப்பு நிகழ்கின்ற, மைதானத்துக்கு வெளியிலுள்ள மரத்தின் வேரோன்றில் உட்கார்ந்து கொண்டு, நண்பன் வரும்வரைக்கும் காத்திருந்தான் செரோக்கி!

கறுத்த பழுப்பு நிற உடம்பும் சுருண்ட கட்டையான கேசமும் 
தடித்த அழகான உதடுகளும் கொண்ட வாயும் விரிந்த நெற்றியும் உடைய வனவாசிகளது உருவம் வெளியுலக மனிதர்களிடமிருந்தும் வித்தியாசமாகக் காணப்பட்டது. 

செரோக்கியும் அவ்வாறே இருந்தபோதிலும் வேருக்குள் வைத்திருக்கும் உடைகளை அவன் அணிந்து கொண்டால், அவனது பூர்வீகம் - வெளியுலகம் சார்ந்தது என்பதால் - அவனும் அவர்களுக்குள் ஒருவனாகி விடுவான். அவன் ஒரு வனவாசி என்பதை எவரும் கணித்துவிட முடியாது! 

இர்வினின் வரவுக்காகக் காத்திருந்த செரோக்கி தூரத்தில் உந்துளி ஒன்று வேகமாக வருவதைக் கண்டான்.
அது இர்வினாகத்தான் இருக்கவேண்டு மென்று அவன் நினைக்கவில்ல.

நெருங்கி வந்த வண்டி “ ட்ரீங்ங்ங்…” என்ற சத்தத்தோடு செரோக்கியின் காலடியில்  நின்றது!

(தொடரும்)

செம்மைத்துளியான்

 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post