போலி NCC முகாம் நடத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு : நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

போலி NCC முகாம் நடத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு : நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!


கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம் கடந்த ஆகஸ்டு 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்துள்ளது. இந்த முகாமில் 8ம் வகுப்பு படிக்க கூடிய 12 வயதுடைய மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் பாலியல் வண்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட மொத்தம் 11 பேர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த தொடர்ந்து ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 23ம் தேதி உயிரிழந்தார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சிவராமன் கிருஷ்ணகிரி அருகே மேலும் ஒரு பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் போலி முகாம் நடத்தி 14 வயதுடைய 9ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சுதாகர், கமல் என்ற மேலும் 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாய்கிழமை கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றின் பெண் முதல்வர் வினோதினி என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு மேலும் ஒரு அரசு பள்ளி என்சிசி மாஸ்டர் கோபு (47) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் பள்ளியில் என்சிசி மாஸ்டராகவும், ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு போலி என்சிசி முகாம் நடத்த அனுமதி அளித்தது, அதற்காக சான்றிதழ் அனைத்தையும் தயார் செய்து கொடுத்தல், மேலும் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டதை தெரிந்தும் அதை மறைத்த குற்றம் என்ற அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கோபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி கருணாகரன் என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இவர் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாகவும், சிவராமனின் அலுவலகத்தில் இருந்த Hard Disk-ஐ எரித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து கருணாகரன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கருணாகரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரப்பம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தகராறில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தற்போது வரை 16 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

kalaignarseithigal


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post