Ticker

6/recent/ticker-posts

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு


தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 6 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்தோர் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை முறையே 17 மற்றும் 6 ஆக அதிகரித்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம், பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

98,635 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 330,894 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் நாடு முழுவதும் 183 பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

21 மாவட்டங்களில் 267 பிரதேச செயலகப் பிரிவுகளில் பலத்த காற்று, வெள்ளம், மரங்கள் சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 82 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 1,465 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நேற்று அதிகாலை 2:30 மணி நிலவரப்படி திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் கிழக்கு கடற்கரையை நெருங்கி, சூறாவளி புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வானிலை அமைப்பின் செல்வாக்கின் கீழ், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியுடன், தீவின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தீவின் ஏனைய இடங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

tamilmirror



 Ai SONGS

 



Post a Comment

0 Comments