ஓ வல்லரசுகளே...!

ஓ வல்லரசுகளே...!


ஓ யுத்தமே...!

உன் சத்தம் கேட்க 
எம் காதுகளுக்கு
இஷ்டமில்லை.

உன் செய்திகளைப் படிக்க
எமக்கு ஆர்வமும் இல்லை.

இரண்டு யுத்தங்கள் கண்ட
இந்த உலகுக்கு
இன்னுமொரு யுத்தம் 
இனி வேண்டாம்.

கொரோனா கொன்றது போக
எஞ்சிய எங்களையாவது
கொஞ்சம் நிம்மதியாக
வாழவிடு.

வன்முறைகளென்றும்
எல்லைப் போர்களென்றும்
நம் நிலங்கள் 
நிம்மதியிழந்தது போதும்.

உலக சரித்திரம்
இன்னுமொரு கறைபடிந்த
அத்தியாயத்தை
இனி எழுதக் கூடாது.

இனியும் வேண்டாம்
இன்னுமொரு யுத்தம்.

ஓ   ஐரோப்பாவே...

உன் கிழக்கு வானில்
போர் மேகங்கள் 
துப்பாக்கி ரவைகளைப்
பொழிகின்றன.

ரஷ்யாவும் உக்ரைனும்
ஆயுதங்களோடு
உரசிக் கொள்கின்றன.

இது 
மூன்றாம் உலகப் போருக்கான
ஒத்திகையா?

உலக அழிவுக்கான
ஆரம்ப கட்டமா?

ஓ  வல்லரசுகளே...!

உங்கள் இரத்த வெறியைத்
தீர்க்க நினைத்தால் 
துவேஷம் பேசும்
துஷ்டர்களைக் கொன்று விடுங்கள்.

பேதங்களைப்
போதனை செய்யும்
போக்கிரிகளை 
அழித்து விடுங்கள்.

சமாதானத்தைப் புறக்கணிக்கும்
சாத்தான்களை
சாகடித்து விடுங்கள்.

யாதும் ஊரே 
யாவரும் ஒன்றே எனக்
கற்றுக் கொடுங்கள்.

அவரவர் உரிமைகளை
அடுத்தவர் சீண்டாத
சுதந்திரத்தைப்
பெற்றுக் கொடுங்கள்.

இனியும் வேண்டாம்
இன்னுமொரு யுத்தம் .

துப்பாக்கிகளைத்
துடைத்து புதுப்பிக்காமல்
உங்கள் எண்ணங்களைத்
தூய்மையாக்குங்கள்.

உங்கள் இரத்தப் பசிக்கு
உலக மக்களைத் 
தீனியாக்குவதை
உடனே நிறுத்தி விடுங்கள்.

உங்கள் வானில் வட்டமிடும்
பிணந்தின்னிக் கழுகுகளைக்
கொன்று விடுங்கள்.

சமாதான புறாக்கள்
பறக்கட்டும்.

உலகம்
அமைதியை விரும்புகிறது.

அமைதியை மட்டுமே தான்
விரும்புகிறது உலகம்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post