
அவா அறுத்தல்--37
ஆசையும் ஆடம்பரமும் அழிவுக்கு வாசல்
பிறவித் துன்பம் வருவதற்கு
ஆசை தானே வித்தாகும்!
பிறவா நிலையை நாம்காண
பொருள்மேல் பற்றை விடவேண்டும்!
ஆசை இன்றி வாழ்கின்ற
பொன்மனம் ஒன்றே நற்செல்வம்!
அதற்கு நிகரோ இவ்வுலகில்
எந்தச் செல்வமும் கிடையாது!
ஆசை இல்லா நிலையொன்றே
தூய்மை போற்றும் நிலையாகும்!
வாய்மை பேசும் ஒழுக்கத்தால்
தூய்மை நிலையை அடைந்திடலாம்!
ஆசையை நீக்கிய மாந்தரைத்தான்
பற்றே இல்லா மாந்தரென்பார்!
ஆசை கொண்டே வாழ்பவரை
பற்றற் றோரெனச் சொல்வதில்லை!
வஞ்சனை செய்யத் தூண்டுவது
நெஞ்சில் படரும் ஆசைதான்!
ஆசைப் படுவதற் கஞ்சுவதே
அகிலம் போற்றும் பண்பாகும்!
ஆசையை நீக்கு நீயிங்கே
விரும்பும் வாழ்க்கை கைகூடும்!
ஆசைத் துன்பம் பெருந்துன்பம்!
ஆசையை விட்டால் பேரின்பம்!
அடங்கா ஆசையை அடக்கிவிடு!
நீங்கா இன்ப வாழ்வமையும்!
ஊழ்—38 --அறத்துப்பால் நிறைவு!
முயற்சி செய் நடப்பதை ஏற்றுக்கொள்
வளத்தை வளர்க்கும் உழைப்பிங்கே!
வளத்தை அழிக்கும் சோம்பல்தான்!
அறிவைக் கெடுப்பது ஊழ்வினைதான்!
அதனால் பொருளை இழந்திடுவார்!
அறிவைக் கொடுப்பதும் ஊழ்வினையே!
அதனால் பொருள்களைச் சேர்த்திடுவார்!
நூல்களை நுட்பமாய்க் கற்றாலும்
ஊழ்வினைத் தூண்டி முன்பிருந்த
அறியா மைக்கே கொடிபிடிக்கும்!
செல்வம் படைத்தவர் இருக்கின்றார்!
அறிவு படைத்தவர் இருக்கின்றார்!
இதற்குக் காரணம் ஊழ்தானே!
ஊழின் ஆட்டம் இதுதானே!
நல்லவை தீயவை ஆகலாம்!
தீயவை நல்லவை ஆகலாம்!
முடிவுகள் இங்கே முரணாகும்
இதற்குக் காரணம் ஊழாகும்!
நமக்கே உரிய செல்வங்கள்
என்றும் நம்முடன் தங்கிவிடும்!
நமக்கில் லாத செல்வங்கள்
நம்மை விட்டே நீங்கிவிடும்!
கோடிச் செல்வம் இருந்தாலும்
விதிஇருந் தால்தான் அனுபவிப்போம்!
துன்பம் வந்தே துளைத்தெடுத்தால்
ஏழையும் நாடுவான் துறவறத்தை!
நல்லவை நடந்தால் துள்ளுவதும்
தீயவை நடந்தால் துவள்வதுவும்
கொள்ளும் மனநிலை தவறாகும்!
சமநிலை ஏற்கக் கற்றுக்கொள்!
விதியை விலக்க முடியாது!
விதியே வாழ்க்கை மறவாதே!
இறைமாட்சி--39.பொருட்பால்
அரசருக்கு வேண்டிய திறமைகள்
அன்பே படையாம் அறிவே அமைச்சாம்
நட்பே வளமாம் இவைகளை இங்கே
அரணெனக் கொண்டால் நிமிர்ந்தே வாழலாம்!
எண்ணித் துணிதல் ஏழைக்கு கொடுத்தல்
வருமுன் காத்தல் ஊக்கமுடன் வாழ்தல்
வாழ்வின் அருமைப் பண்புகளாம்!
சோம்பல் ஒழித்தல் கல்வியில் செம்மை
உள்ளத் துணிவு இவைகள் மூன்றுமே
காக்கும் படைகள் என்றே அறிந்திடு!
அறநெறி போற்றி குற்றந் தடுத்து
வீரமுடன் வாழ்தல் வாழ்க்கைக் கழகாகும்!
வரவைப் பெருக்கி வந்ததைக் காத்து
தேவைக் கேற்ப பொருள்களை வாங்கி
வாழ்வை அமைத்தல் அருமை இல்லறமாம்!
எளிமை இனிமை எண்ணத் தூய்மை
நல்மனம் கொண்டால் உலகம் புகழும்!
இன்சொல் பேசி கனிவுடன் ஈந்தால்
போற்றிப் புகழும் உலகம் என்றும்!
தன்னலம் இன்றி நடுநிலை காத்தால்
மாந்தருள் மாணிக்கம் என்றே புகழ்வார்!
கடுஞ்சொல் தாக்கி உலுக்கி னாலும்
பொறுமை காத்தால் வாழ்வே தழைக்கும்!
அன்பு, கருணை, நீதி, அரவணைப்பு
வாழ்க்கைப் பாதையின் ஒளிதான் அவைகள்!
கல்வி--40
அறிவொளியை ஏற்றுவது கல்வி
கற்பதை முழுமையாய்க் கற்கவேண்டும்!
கற்றதற் கேற்ப நடக்கவேண்டும்!
எண்ணும் எழுத்தும் படிப்பாகும்!
வாழ்க்கைப் பாதையின் கண்களாகும்!
கற்றவர் முகத்தில் இருப்பதைத்தான்
கண்கள் என்றே சொல்வார்கள்!
கல்லா மாந்தர் கண்ணிரண்டும்
கண்கள் அல்ல புண்கள்தான்!
பண்புடன் பேசி மகிழ்ந்துவிட்டு
இங்கே பிரியும் நேரத்தில்
மீண்டும் என்று சந்திப்போம்
என்றே சான்றோர் ஏங்கவைப்பார்!
செல்வம் உள்ளவர் முன்னாலே
வறியவர் நிற்கும் கோலம்போல்
படித்தவர் முன்னே படிக்காதோர்
தாழ்ந்தவ ராக நின்றிருப்பார்!
கேணியைத் தோண்டு நீரூறும்!
படிக்கப் படிக்க அறிவூறும்!
கற்றவ ருக்கோ இவ்வுலகம்
சுற்றம் போல உறவாகும்!
இதனால் ஒருவர் இறுதிமட்டும்
ஏனோ படிக்கக் கூடாது?
இந்தப் பிறவியில் படித்துவிட்டால்
ஏழு பிறவிக் கரணாகும்!
மக்கள் திளைக்கும் மகிழ்ச்சிக்கு
காரண மான கல்வியினை
மேலும் சான்றோர் கற்பதற்கு
விரும்பித் தானே வாழ்வார்கள்!
கல்விச் செல்வம் நிலையாகும்!
மற்றவை எல்லாம் நிலையல்ல!
திருக்குறள் குழந்தைப் பாடல்
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments