
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் (NASA Perseverance Rover), செவ்வாய் கிரகத்தின் (Mars) மேற்பகுதியில் சில ட்யூப்களை (Tube) வீசிய வண்ணம் உள்ளது.
அதென்ன ட்யூப்? அவைகள் ஏன் செவ்வாய் கிரகத்தில் வீசப்படுகிறது? அந்த ட்யூப்களுக்குள் என்ன உள்ளது? இதோ விவரங்கள்:
இதுவரை மொத்தம் 5 ட்யூப்கள் வீசப்பட்டுள்ளன!
உங்களில் சிலருக்கு நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் பற்றி பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது, அறியாதோர்களுக்கு, பெர்சவரன்ஸ் என்பது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ பள்ளத்தை (Jezero crater) ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மார்ஸ் ரோவர் (Mars Rover) ஆகும். கடந்த 1 வருடமாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் இந்த மார்ஸ் ரோவர், இதுவரை மொத்தம் 5 ட்யூப்களை செவ்வாய் கிரகத்தில் வீசி உள்ளது.

அந்த ட்யூப்களுக்குள் என்ன உள்ளது? செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் போடப்படும் இந்த ட்யூப்களுக்குள் இருப்பது பூமியில் இருந்து அனுப்பப்பட்ட பொருட்கள் இல்லை. அதற்குள் இருப்பது செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களே ஆகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் அவைகள் அனைத்துமே, பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் (Samples) ஆகும்.
அந்த ட்யூப்கள் ஏன் செவ்வாய் கிரகத்தில் வீசப்படுகிறது? சேகரிக்கப்படும் மாதிரிகளை ஏன் தூக்கி வீச வேண்டும், அவைகளை மார்ஸ் ரோவேரே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் அல்லவா? என்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கு நாசாவின் பதில் என்னவென்றால்: எங்களுடைய வருங்கால செவ்வாய் கிரக பயணத்தின் போது, பெர்சவரன்ஸ் ரோவரை எங்களால் சந்திக்க முடியாமல் போகலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் பெர்சவரன்ஸ் ரோவாரால் சேகரிக்கப்பட்டு, வீசப்பட்ட சாம்பிள் ட்யூப்களை எங்களால் சேகரிக்க முடியும் மற்றும் அதை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர முடியும்.
தம்மாத்துண்டு ட்யூப்களுக்கு இவ்ளோ முக்கியத்துவமா? பெர்சவரன்ஸ் ரோவரால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் - பாறை மாதிரிகள் (Rock Samples) ஆகும். அவைகள் வெவ்வேறு இயல்புகளை கொண்டவை மற்றும் சமீபத்திய மாதிரியானது மாக்மாவிலிருந்து (Magma) உருவாக்கப்பட்ட ஒரு பாறையுடையது ஆகும் அவைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்யும் போது, தற்போது தரிசு நிலமாக உள்ள செவ்வாய் கிரகத்தின் ஆரம்பகால வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். அதே போல, அங்கே உயிர்கள் இருந்தனவா என்பது தொடர்பான புரிதலும் கிடைக்கும்.

ஒருவேளை கீழே வீசப்பட்ட ட்யூப்கள் அழிந்து விட்டால்? அதுபற்றி நாசா கவலைப்படாது. ஏனென்றால் பெர்சவரன்ஸ் ரோவர் இதுவரை சந்தித்த ஒவ்வொரு செவ்வாய் கிரக பாறையிலிருந்தும் (Mars Rock) இரண்டு மாதிரிகளை எடுத்துள்ளது. அதில் ஒரு மாதிரியை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலேயே (Mars Surface) போட்டுவிடும். மற்றொன்றை ரோவர் தனக்குள்ளேயே சேமித்து வைத்துக்கொள்ளும். அமெரிக்காவின் வருங்கால செவ்வாய் கிரக ஆய்வின் போது, நாசாவிற்கு இரண்டு மாதிரிகளில் ஒன்று கண்டிப்பாக கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், இந்த மாதிரிகளை மீட்டெடுக்கும் பணி (Recover Mission) வருகிற 2028 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் 2033 ஆம் ஆண்டில் பூமிக்கு கொண்டுவரப்படும்.
SOURCE;gizbot
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments