மௌலானா ஜலாலுத்தீன் ரூமி: ஆத்மீக ஆளுமையும், பங்களிப்பும்

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி: ஆத்மீக ஆளுமையும், பங்களிப்பும்


மௌலானா ஜலாலுத்தீன் ரூமி உலகப் புகழ் பெற்ற காவியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ”மஸ்னவி“யை உருவாக்கிய ஒரு ஸுபிக் கவிஞர் என்ற வகையிலேயே பெரும்பாலும் பிரபல்யமும், புகழும் பெற்றுள்ளார். ஆனால் ரூமியின் ஆளுமைப் பங்களிப்பு இதைவிட மிகவும் ஆழமமானது. அவர் ஒரு ஸூபிக் கவிஞர் என்பதைவிட ஒரு சிந்தனையாளர், ஆத்மஞானி, என அடையாளப்படுத்துவதே மிகப் பொருத்தமாகும். இஸ்லாமிய சிந்தனையின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் தோன்றி அதில் கணிசமான தாக்கத்தை தனது ஆத்மீக ஆளுமையின் மூலமாகவும், சிந்தனைகள், கருத்துக்கள் மூலமாகவும் தோற்று வித்தவராக ஸெய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி அவரது “ரிஜாலுல் பிக்ர்- வத்தஃவா பில் இஸ்லாம்” எனும் நூலில் அவரைப் பற்றி விளக்குகின்றார்.

ஜலாலுத்தீன் ரூமி அவரது “மஸ்னவி” என்ற ஒப்பற்ற காவியத்தின் மூலம் முஸ்லிம் உலகில் மட்டுமன்றி, மேற்கத்திய ஆய்வாளர்களின் கவனத்தையும் பெற்றவராவார். இஸ்லாமிய உலகில் அல்லாமா ஷிப்லி நுஃமானி, ரூமியின் வாழ்க்கை வரலாறு பற்றி உர்து மொழியில் ஒரு நூலை எழுதினார். மேற்கத்திய ஆய்வாளர்களில் E.G Brown, Prof. Nicholson, A.J. Arbury, Redlouse, Wlifrild ஆகியோர் ருமி பற்றி விரிவாகப் பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ரூமியை மஸ்னவி என்னும் மாபெரும் காவியத்தை உருவாக்கிய ஒரு ஸுபிக் கவிஞராகவே நோக்கினா். ஆனால் ரூமியை இஸ்லாமிய சிந்தனையின் வளர்ச்சியின் பின்புலனில் நோக்கி ஒரு கவிஞராக மட்டுமன்றி ஒரு சிந்தனையாளராகவும், இஸ்லாமிய சிந்தனை வளர்ச்சியில் ஒரு முக்கிய காலகட்டத்தில் தோன்றி மிகப் பெரிய அறிவு, ஆத்மீகப் பங்களிப்பைச் செய்த ஒரு ஆளுமையாகவும் அவரை நோக்கியதனிச் சிறப்பை ஸெய்யித் அபுல் அஸன் அலி நத்வி பெறுகின்றார்.

ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிவு, சிந்தனைத் துறையில் பகுத்தறிவு ரீதியான அணுகுமுறையும், தாக்கமும் மிகைத்த ஒரு சூழல் காணப்பட்டது. இக்காலப் பிரிவில் பகுத்தறிவு ரீதியான சிந்தனைக்கு முன்னுரிமை வழங்கிய முஃதஸிலா இயக்கம் அதன் செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் இழந்திருந்தாலும், அதன் சிந்தனைத் தாக்கத்தின் எதிர்மறையான பாதிப்புகள் இன்னும் தொடர்ந்து செயல்பட்டன. முஃதஸிலா இயக்கத்தின் தீவிர பகுத்தறிவுவாதக் கொள்கைக்கு எதிராகத் தோன்றிய சிந்தனைப் பிரிவே “இல்முல் கலாம்” ஆகும். “முதகல்லிபீன்”என அழைக்கப்பட்ட இல்முல் கலாம் சார்ந்த அறிஞர்களே அல்லாஹ்வின் “தாத்”, ‘ஸிபாத்” போன்ற மறைவான உலகைச் சார்ந்த விடயங்களை பகுத்தறிவு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் விளக்க முன்வந்தனர். இதன் காரணமாக இஸ்லாமிய உலகில் உயிரோட்டமற்ற தர்க்கமும், பகுப்பாய்வும் கொண்ட ஒரு தத்துவம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. பகுத்தறிவு ரீதியான தர்க்கமும், அனுமானமும் மனித அறிவிற்கு இயக்கத்தையும், அசைவையும் வழங்கினாலும், உள்ளங்கள் ஈமான் என்னும் விசுவாசத்தின் உஷ்ணத்தை இழந்திருந்தன. இத்தகைய காலகட்டத்தில் உள்ளங்களில் ஈமானினதும், இறை நேசத்தினதும் உணர்வைத் தூண்டி உயிரோட்டத்தை தோற்றுவிக்கக் கூடிய ஒரு பலம்வாய்ந்த ஆளுமையை உலகம் வேண்டிநின்றது.

ஆத்மஞானி மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் தோற்றமும், ”மஸ்னவி” என்னும் அவரது ஆத்மிகக் காவியத்தின் உணர்வும், இறைநேசம் மிக்க கவிதைகளும் புலன் அனுபவங்களுக்கு முன்னுரிமை அளித்து, அறிவையும் தார்க்கத்தையும் மேம்படுத்திய தத்துவ சிந்தனையின் செல்வாக்கைப் பலமிழக்கச் செய்தது. ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கை வரலாறு மிக நுண்ணிய உணர்வுமிக்க, இறை நேசத்தால் நிரம்பிய உள்ளத்தையும், ஆழமான சன்மார்க்க அறிவையும் பெற்றிருந்த ஆளுமையை அவர் பெற்றிருந்ததை விளக்குகின்றது.

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் ஹிஜ்ரி 604 கி.பி. 1207ல் பல்க் நாட்டில் பிறந்தார்கள். ரூமியின் பிறப்புக்குச் சில நாட்களின் பின் அவரது தந்தைக்கும் பல்க் நாட்டின் மன்னருக்குமிடையில் சில அரசியல் தகராறுகள் காரணமாகசில மனக் கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பலக் நாட்டை விட்டு ஜலாலுத்தீனின் தந்தை குடிபெயர்ந்து சென்றார். இவ்வாறு பல்வேறு இடங் களுக்கும் அலைந்து சென்று ரூமியின் குடும்பத்தினர் இறுதியில் சின்னாசியாவிலுள்ள (Asia minor) கோனியா (Iconium) என்னும் ஊரில் குடியேறினர். அரபு மொழியில் சின்னாசியப் பிரதேசம் ரூம் என அழைக்கப்பட்டது. இதிலிருந்தே ஜலாலுத்தீனுக்கு “ருமி” என்ற காரணப் பெயர் வழங்கப்படலாயிற்று. ஜலாலுத்தீன் பிரபல சூபிக் கவிஞரான பர்உத்தீன் அத்தாரை நீஸாபூரில் சந்தித்தார் என்றும் ரூமியின் பண்புகளால் கவரப்பட்ட அத்தார் தனது “அஸரார் நாமா” என்ற மெஞ்ஞான தத்துவங்கள் அடங்கிய நூலை ரூமிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாரென்றும் சிலர் கூறுவர். ஆனால் இத்தொடர்பு நீடித்ததைப் பற்றியதற்கான குறிப்புக்களோ ரூமியின் கருத்துக்களில் அத்தாரின் சிந்தனையின் செல்வாக்குக் காணப்படுவதற்கான ஆதாரங்களோ இல்லை.

ஜலாலுத்தீன் ரூமி ஆரம்ப காலத்தில் சட்டம், தர்க்கம், தத்துவம் முதலிய தர்க்கரீதியான கலைகளிலேயே (Exact sagacious) ஆர்வம் செலுத்தினார். ஆனால் ரூமியின் ஆன்மீகத் தாக்கத்தையும், மெஞ்ஞான அறிவு பற்றிய வேட்கையினையும் இக் கலைகளினால் தீர்க்க முடியவில்லை. எனவே. ரூமியின் ஆர்வம் மெஞ்ஞானக் கலையின்பால் சென்றது. புர்ஹானுத்தீன் திர்மதி, ஷம்ஸ் தப்ரீஸி போன்ற மெஞ்ஞானச் செல்வர்களோடு தொடர்பு கொண்டு ‘தஸவ்வுப்’ பற்றிய அறிவினை அவர் பெற்றார். ஷம்ஸ் தப்ரீஸி ரூமியோடு பல்லாண்டுகள் தங்கி அவர் மீது தனதுசெல்வாக்கினை ஆழப் பதித்துவிட்டார். ரூமியின் கவிதைத் தொகுதியொன்றிற்கு “தீவானே ஷம்ஸெ தபரீஸி’ எனப் பெயரிடப்பட்டிருப்பதே ரூமியின் மீது அவரது செல்வாக்கைக் குறித்து நிற்கின்றது. கி.பி. 1247 ஷம்ஸ் தப்ரீஸ் மரணித்ததும் ரூமியை ஆறாத் துயரம் ஆட்கொண்டது. தனது மெஞ்ஞான குருவின் நினைவாக ‘மௌலவியா” என்னும் தரீக்காவை ரூமி நிறுவினார்.

மௌலானா ரூமி இஸ்லாமிய உலகம் ஈன்றெடுத்த இணையற்ற மெஞ்ஞானச் செல்வர். பாரசீக இலக்கியம் கண்ட தலைசிறந்த மெஞ்ஞானக் கவிஞர். ரூமி எண்ணற்ற பல ‘ருபய்யாத்கள்’, ‘கஸல்கள்’ என்பவற்றை உள்ளடக்கிய பல தனிப் பாடல்களை இயற்றியுள்ளார். இவை அவரது ‘தீவான்’ என்னும் தொகை நூலில் இடம்பெற்றுள்ளன. தனது மெஞ்ஞானப் போதகரும், ஞான குருவுமான ஷம்ஸ் தப்ரீஸிற்கு நன்றிக் கடனாக அதற்கு ‘தீவானே ஷம்ஸ் தப்ரீஸ்’ எனப் பெயரிட்டார். அவரது புகழ் பரவக் காரணமாய் அமைந்த பெருநூல் “மஸ்னவி“ ஆகும் ‘பாரசீக மொழியின் குர்ஆன்” என இந்நூல் புகழப்படும் பான்மையே அதன் சிறப்பிற்குச் சிறந்த சான்றாய் அமைகின்றது.

சூபித்தத்துவம், அதன் மரபுவழி உண்மைகள், நெறி முறைகள் என்பனவற்றை உவமான உவமேயங்களைக் கொண்டும்.பல உருவகக் கதைகளைக் கொண்டும் மௌலானா ரூமி விளக்கியுள்ளார். உருவகக் கதைகளின் துணைகொண்டு மெஞ்ஞானத் தத்துவங்களை விளக்குதல் பாரசீக இலக்கிய மரபாக இருந்து வந்துள்ளது. இத்துறையில் பரீஉத்தின் அத்தார் என்ற பாரசீக சூபிக் கவிஞர் இயற்றிய ‘மன்திக்-தாஇர்’ (பறவைகளின் பாராளுமன்றம்) என்ற நூல் பாரசீக இலக்கியத் துறையில் சிறப்பிடம் வகிக்கின்றது. இந்த மரபை அடியொற்றியே மௌலானா ரூமி இப் பெருநூலை இயற்றியுள்ளார். மாபெரும் ஆன்மீக உண்மைகள், மெஞ்ஞானத் தத்துவங்கள். என்பன சிறிய உருவகக் கதைகளின் துணைகொண்டு விளக்கப்படுகின்றன. மனிதனுக்கும் இறைனுக்குமிடையேயுள்ள  ஆன்மீக உறவினை விளக்குவதும், தனது மூலஸ்தானத்திலிருந்து பிரிந்த மனித ஆத்மா அந்தமூலப் பொருளை அடைவதன் மூலமே அமைதி பெற முடிகின்றது என்ற உண்மையும் மஸ்னவியில் விளக்கப்படுகின்றது.

மஸ்னவியின் ஆரம்பக் கவிதை இதனை சூட்சுமமாக உணர்த்தி நிற்கின்றது. ”சோகக் குரலெழுப்பும் புல்லாங்குழல் என்ன கதையைக் கூறுகின்றது எனக் கேளுங்கள்- அது தனது பிரிவின் துயரைப் பற்றிக் கூறுகின்றது அதன் மூலஸ்தானமான மூங்கிற் புதரிலிருந்து தன்னைப் பிரித்து விட்டார்கள் எனத் துயரக் குரலெழுப்பி முறைப்படுகின்றது….’ மஸ்னவி ஷரீபின் இந்த ஆரம்பக் கவிதையில் மனித ஆத்மாவைப் புல்லாங்குழலுக்கும், புல்லாங் குழலை செய்வதற்கான மூங்கில் வெட்டி எடுக்கப்படும் மூங்கிற் புதரை அந்த ஆன்மாலின் மூலஸ்தானமான இறைவனின் சன்னிதானத்திற்கும். உவமிக்கப்பட்டுள்ளது. எனவே புனித ஆன்மா அதன் மூலஸ்தானத்தைச் சென்றடையும் வரையில் நிம்மதியடைவதில்லை என்ற தத்துவத்தை மிக எளிய சாதாரண உவமையின் துணைகொண்டு ரூமி விளக்கியுள்ளார்.

மஸ்னவியின் இந்த ஆரம்பக் கவிதையைப் பேராசிரியர் பால்மர் (Professor Palmer) ‘Song of the Reed”புல்லாங் குழலின் கவிதை” என அழைக்கின்றார். இந்த ஆரம்பக் கவிதையில் கூறப்படும் தத்துவமே மஸ்னவியில் விரித்துரைக்கப்படுகின்றது. மஸ்னவிக்கு மெளலானா ரூமி அரபு மொழியில் எழுதியுள்ள முன்னுரையில் அது பாரசீக மொழியிலுள்ள குர்ஆனென்றும், உன்னதமான அறிவுரைகளையும், ஞானங்களையும் உள்ளடக்கிய பெருநூலென்றும் குறிப்பிடுகின்றார். ரூமியின் ‘தீவானே ஷம்ஸே தப்ரீஸி’. ‘மஸ்னவி’ ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் நிக்கல்ஸன் ரூமியின் மொழிநடை பாரசீகக் கவிஞர்களுள் ஒருவரான ஹாபிஸின் நடையின் கவர்ச்சியையும், ஒழுங்கையும் பெறவில்லை எனக் கருதுகின்றார். ஆனால் ஒரு கவிஞர் என்ற முறையில் தனது குபிக் கருத்துக்களை அவற்றின் உயிர்த்தன்மை மாறாமல் கவிதை உருவில் வெளியிடுவதில் மகத்தான வெற்றிகண்டார் என்றும் குறிப்பிடுகின்றார். பொதுவாக இஸ்லாமிய வரலாற்றிலும்,சிறப்பாக சூபித் தத்துவத்தின் வளர்ச்சியிலும் மௌலானா ரூமியின் செல்வாக்கு ஆழப் பதிந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

ரூமியின் வரலாறு என்பது இஸ்லாமிய தத்துவத்தின் வரலாறு எனக் கூறக்கூடிய அளவிற்கு ரூமியின் இலக்கிய பணியும், இஸ்லாமியப் பணியும் விளங்கும் பான்மையினை கலாநிதி கலிபா அப்துல் ஹகீம் என்பவர் தனது “The metaphysics of Rumi’ என்ற ஆராய்ச்சி நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

The study of Rumi is interesting not, because he is the greatest mystic poet of Islam but because of the fact that in him we find a man who has left no problem of philosophical and religious life untouched. In him we find not the creation of problems but the rethinking in the light of Personal experience of all that had gone before him. So, in one way the study of Rumi is the study of the best achievements of Philosophical and religious life in Islam. (The Metaphysics of Rumi -P.3)

“ரூமியைப் பற்றிய ஆராய்ச்சி மிக இன்பம் பயப்பதாகும். அது அவர் இஸ்லாத்தின் தலை சிறந்த மெஞ்ஞானக் கவிஞர் என்ற காரணம் பற்றியன்று. ஆனால் வாழ்க்கையின் மத அடிப்படை யிலும் தத்துவ அடிப்படையிலும் எழுந்த எல்லாப் பிரச்சினையையும் தொட்டுச் சென்றவர் என்ற முறையி லேயே ரூமி பற்றிய ஆய்வு இன்பம் பயப்பதாக அமைகின்றது. ரூமி பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவில்லை. ஆனால் அவருக்கு முன்னெழுந்த பிரச்சினைகள் பற்றித் தனது சொந்த அனுபவத்தின் துணைகொண்டு ஆய்வு நிகழ்த்தினார். எனவே ஒருவகையில் பார்க்கப்போனால் ரூமியைப் பற்றிய ஆராய்ச்சியானது இஸ்லாத்தின் மதத்துறையிலும், தத்துவத் துறையிலும் சாதிக்கப்பட்ட சாதனைகள் பற்றிய ஆராய்ச்சியாகவே அமையும்.“

ரூமியைப் பற்றிய ஆராய்ச்சி அவரது மஸ்னவியை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்படல் வேண்டும். ஆனால் இது அவ்வளவு இலகுவான செயலன்று. ஏனெனில் மஸ்னவியின் அமைப்பு முறை மிகச் சிக்கலானது. பல்வேறு வர்ணங் கொண்ட நூலிழைகள் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டு இழைக்கப்பட்ட ஆடை போன்று மஸ்னவி விளங்குகின்றது. அதனை பிரித்துணர ஆழ்ந்த பொறுமை வேண்டும். ஒரு சாதாரண எளிய கதையினூடே சிக்கலான தத்துவத்தைப்பின்னிச் செல்லும் பண்பு மஸ்னவியில் உண்டு. ஒரு அறிவுரை, அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த பெருந் தத்துவம், திடீரென மெஞ்ஞானக் கிளர்ச்சியின (ECTACY)டியாக எழும் ஒரு உருவகக் கதை, என ஒழுங்கற்று, ஒன்றோடொன்று பின்னப்பட்டும், அதே நேரத்தில் ஒன்றுக் கொன்று தொடர்பற்றும் விடயங்கள் விளக்கப்படுகின்றன. எனவே மஸ்னவியின் முத்துக்கள் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து ஒன்றாக இணைத்து விட்டால் ரூமியின் சிந்தனையின் ஒருமைப்பாட்டையும், தத்துவத்தின் சாயலையும், மெஞ்ஞான அறிவுரைகளின் முத்திரையினையும் நாம் அறிந்து இனங்கண்டுகொள்ள முடியும்.

மௌலானா ரூமியின் தலையாய நோக்கம் மஸ்னவி மூலமாக மனித இனத்திற்கு மெஞ்ஞான நெறிமுறைகளை விளக்குவதாகும். இஸ்லாமிய வரலாற்றில் மூன்று வகையான சிந்தனைகள் பூரண வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்திலேயே மௌலானா ரூமி தோன்றினார்.தஸவ்வுப் (Mysticism) இல்முல் கலாம் (Scholaticism) பல்ஸபா (Philosophy) ஆகிய மூன்றுமே அவையாகும். ரூமி ஹிஜ்ரி 604 கி.பி. 1207ல் பிறந்தார். அவரது தோற்றத்துக்குச் சற்று முன்னர் இபுனு ருஷ்தின் (ஹி.520-595 கி.பி. 1126-1198) சிந்தனைகளில் கிரேக்கத் தத்துவக் கருத்துக்கள் இஸ்லாமிய சிந்தனையின் சாயலில் விளக்கப்பட்டு கிரேக்கத் தத்துவங்களின் செல்வாக்கு உச்ச நிலையடைந் திருந்தது. ஹி.150- கி.பி.767ல் மரணித்த பிரபல மெஞ்ஞானி அபூஹாஷிம் முதற் கொண்டு ரூமியின் உடனிகழ் காலத்தவரான இபுனுல் அரபிவரை குபித்தத்துவம் பூரண வளர்ச்சியடைந்திருந்தது. ரூமிக்கு முன்பதாக இமாம் அல்கஸ்ஸாலி (கி.பி. 1058-111) கலாம், பல்ஸபா, தஸவ்வுப் ஆகிய மூன்று அடிப்படைகளையும் இணைத்துப் பொதுவான ஒரு தத்துவத்தை வகுத்திருந்தார். எனவே மௌலானா ரூமி இந்த சிந்தனைகள், தத்துவங்கள், மெஞ்ஞான நெறிமுறைகள், ஆன்மீக விளக்கங்கள் அனைத்துக்கும் வாரிசாகவே தோன்றினார். அவருக்கு முன் வளர்த்திருந்த அத்தனை தத்துவங்களையும் இணைத்து ஒரு பூரணமான, பொதுவான தத்துவமொன்றை அவர் உருவாக்கினார்.

அவரது தத்துவங்களில் முக்கிய அடிப்படையாக விளங்குவது பரிணாம வாதம் பற்றிய தத்துவமாகும். இந்தத் தத்துவத்தை முதலில் சிந்தித்துணர்த்திய முஸ்லிம் அறிஞர் இபுனு மிஸ்கவை (ஹி.421 மரணம்) ஆவர். ஆனால் ரூமியின் பரிணாமவாதம் பற்றிய தத்துவம் நவீன விஞ்ஞானிகளின் பரிணாமத் தத்துவத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. டார்வின் போன்ற நவீன சிந்தனையாளர் மனித இனத்தின் மூலத் தோற்றம் பற்றி விளக்கவே இத்தத்துவத்தைக் கையாண்டனர். மரணத்திற்குப் பிறகு நிகழும் வளர்ச்சி பற்றி அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் ரூமி வேறு ஒரு கோணத்திலிருந்து பரிணாம தத்துவத்தை விளக்குகின்றார். “மனித ஆத்மா அதன் மூலப் பொருளிலிருந்து பிரிக்கப்பட்டது. எப்படி? யாரால்? என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. இவ்வாறு பிரிவுண்ட ஆன்மா அதன் மூலஸ்தானத்தை நோக்கி மீளுவதற்கு முயற்சிக்கின்றது. எனவே வாழ்க்கை என்பது அது தன் மூலஸ்தானத்திற்கு மீளுவதற்கான முயற்சியேயாகும். அது எங்கிருந்து வந்ததோ அந்த இடத்தை நோக்கி படிப்படியாக மீளுவதற்கு பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அது முயலுகின்றது. வாழ்வின் அடிப்படையான ஆன்மா சடத்திலிருந்து தனது பிரயாணத்தை ஆரம்பித்து மேலெழுந்து வளர்ந்து செல்ல விழைகின்றது. மனிதனின் பரிணாம வளர்ச்சி உடலோடு முடிவதில்லை. மரணத்தோடு முற்றுப்பெறுவதில்லை. அது சூழலின் நிர்ப்பந்தத்தால் ஏற்படுகின்றதுமன்று. ஒரு பொதுவான ஒழுங்கிற்கும், சட்டத்திற்கும் உட்பட்டே இந்தப் பரிணாம வளர்ச்சி நிகழ்கின்றது. அத்தோடு ஓர் அடிப்படை நோக்கத்துடனேயே இந்தப் பரிணாம வளர்ச்சி நிகழ்கின்றது. அதுவே மூலஸ்தானத்திலிருந்து பிரிந்த மனித ஆத்மா தனது மூலத்தை நோக்கிச் செல்ல முனையும் நோக்கமாகும். மௌலானா ரூமியின் இந்தத் தத்துவம் டார்வினின் பரிணாம தத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்டு நிற்பதை நாம் ஈண்டு காண முடிகின்றது.

அன்பு

மனித ஆத்மா தனது மூலத்திற்கு மீழும் பொருட்டு எடுக்கும் இம்முயற்சியில் ஒவ்வொரு பொருளையும் தனது நிலையிலிருந்து உயர்ச்சியடையச் செல்லத் தூண்டுவது ‘அன்பு’ என்ற சக்தியாகும். வாழ்வின் தோற்றம், வளர்ச்சி, வெளிப்பாடு, பிணைப்பு அத்தனையும் அன்பின்பிரதிபலிப்பாகும். இலட்சியத்தை அடைய முயல்தென்பது அன்பு அழகை அடையச் செய்யும் பிரயத்தனமாகும். வாழ்க்கையின் அனைத்துப் பொருட்களும் அன்பின் சக்தியினாலேயே இயக்குவிக்கப்படுகின்றன. அன்பின்றேல் வாழ்வின் அசைவில்லை, ஓட்டமில்லை.

அன்பைப் பற்றிய ரூமியின் தத்துவத்தைப் போன்றே அறிவு பற்றிய அவரது விளக்கமும் அமைந்துள்ளது. பிரபஞ்சம், மனித வாழ்வு, ஆன்மா, மரணம் என்பவற்றைப் பற்றிய உணர்வைப் பெற புலன்களின் வழியாகப் பெறப்படும் பகுத்தறிவு என்றும் துணை நிற்க முடியாது என்ற கருத்தினை இமாம் கஸ்ஸாலி அவர்கள் தங்களது ‘முன்கித் மினல் ளழால்” என்ற நூலில் விளக்கியுள்ளார்கள். மௌலானா ரூமியும் இந்தத் தத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றார். எனவே, யதார்த்தத்தை அறிய அன்பு ஒன்றுதான் துணைபுரிய முடியும் எனக் கருதும் ரூமி அன்பு பற்றிய விளக்கத்தை அளிக்கவில்லை. அன்பை விளக்கும் வகையில் நான் எதைச் சொன்னாலும் அன்பைப் பற்றிச் சொல்ல நான் தயங்குகிறேன். அன்பின் விளக்கத்தை அன்பு ஒன்றுதான் அளிக்க முடியும். சூரியனுக்கு ஆதாரம் சூரியனே!வார்த்தைகளினால் நீங்கள் ஒன்றை விளக்க முனைந்தால் நீங்கள் உண்மைக்கு மேலால் இன்னொரு திரைபோடுகின்றீர்கள்!

எனவே மதத்தின் ஆன்மீக ரகசியங்களை அறிய ‘இஷ்க்’ என்னும் பேரின்பக் காதலே துணைபுரிய முடியும். மௌலானா ரூமியின் இக் கருத்துக்களின் செல்வாக்கினை இக்பாலின் சிந்தனைகளில் நாம் அவதானிக்க முடிகின்றது.ரூமியின் தத்துவத்தின் இன்னொரு முக்கிய பண்பு வாழ்க்கையை பற்றிய உணர்வு ரீதியான விளக்கமாகும். மனிதனைப் பற்றிய உயர்ந்த கோட்பாடாகும். மனிதன் அவனது விதியைத் தானாகவே உருவாக்குவதாக ரூமி கருதுகின்றார். பாவம் என ஒன்று இல்லையெனில் நன்மையும் இல்லை என்பது ரூமியின் தத்துவமாகும். உலகில் பாவமும், தீமையும் இருக்கின்றன. அந்த தீமைக்கு எதிராகப் போராடுவதன் மூலமே மனிதன் உயர்ச்சியடைய முடியும் என்கின்றார். இந்தத் தத்துவத்தைப் பின்வருமாறு அழகாக விளக்குகின்றார்:

“உண்மையின்றி பொய் தோன்றுவ தில்லை தங்கக் காசு என நினைத்து செல்லாக் காசை ஒரு மூடன் வாங்கினான். நியாயமாக அனுமதிக்கப்பட்ட பணமில்லாவிடில் செல்லாக்காசு எங்கிருந்து வரமுடியும்?

தவறான பொருட்கள் இல்லாவிட்டால் எல்லோருமே நுட்பமான வணிகர்களாக இருப்பர். தவறு என ஒன்று இல்லையெனில் தகுதியானதையும், தகுதியற்றதையும் பிரித்தறிவதெப்படி?

எல்லாவற்றிலும் தவறிருந்தால் அறிவுக்கு வேலை ஏது? எல்லாம் ஒரேவகையான மரமென்றால் சந்தனமரம் எங்குமே இருக்காது.

அனைத்தும் நன்மையே எனச் சொல்பவன் மூடன். அனைத்தும் தீமையே என்பவனும் அறிவிலியே!”

எனவே உலகில் தீமை, நன்மை என இரு சக்திகள் இருப்பதால் வாழ்வு பூரணத்துவம் பெறுகின்றது. இதன் காரணமாகவே வாழ்வில் அசைவும், ஓட்டமும் பிறக்கின்றது.

இந்தத் தத்துவத்தை ரூமி பின்வருமாறு விளக்குகின்றார்:

“ பகைவரில்லையெனில் அறப் போர் நிகழ முடியாது.

ஆசையும், உணர்வுகளும் இல்லையெனில் இறைவனுக்கு அடிபணிதல் என்பது இருக்க முடியாது

ஆசையில்லையெனில் கட்டுப்பாடும் இல்லை . எனவே ஆசைகளைத் துறந்து துறவியாகாதே!

கற்பும். ஒழுக்கமும் ஆசையிலிருந்து தான் தோன்றுகின்றன.”

ரூமியின்  இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே இக்பால் தனது ‘குதி” (KHUDI) பற்றிய தத்துவத்தை உருவாக்கியுள்ளார்.

தனது மூலஸ்தானத்திலிருந்து பிரிந்த மனித ஆத்மா தனது மூலத்தை நோக்கி செல்ல ஒரு மாபெரும் போராட்டத்தில் சிக்குகின்றது. உலகிலுள்ள ஒன்றுக் கொன்று முரண்பட்ட சக்திகளுக்கிடையில் சிக்கும் இப்போராட்டம் அதனை வளர்ச்சியடையச் செய்கின்றது. அன்பென்னும் சக்தியை உயிர்நிலையாகக் கொண்டு, போராட்டத்தினால் உரம்பெற்று தனது இறுதி இலட்சியமான பூரண அழகை, நித்திய அழகை, மூலத்தை நோக்கி மனிதன் பிரயாணம் செய்கின்றான். அந்த உயர் லட்சியத்தை அடைந்தவனே “இன்ஸானுல் காமில்” பூரண மனிதன் என ரூமி குறிப்பிடுகின்றார். ‘இன்ஸானுல் காமில்” என்னும் பூரண மனிதனைப் பற்றிய தத்துவத்தை ரூமிக்கு முன் பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். இமாம் கஸ்ஸாலி தங்களது “மிஷ்காதுல் அன்வார்” என்ற நூலில் இத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.

ரூமியின் உடனிகழ் காலத்தவரான இப்னுல் அரபியும் இதுபற்றி ஆராய்ந்துள்ளார். பிற்காலத்தில் அப்துல் கரீம் ஜீலி என்பார் “இன்ஸானுல் காமில்” என்ற பெயரில் ஒரு தனி நூலையே இயற்றியுள்ளார். மௌலானா ரூமியும் இவர்களின் வழிநின்று இந்தத் தத்துவத்தை ஆராய்கின்றார். “இன்ஸானுல் காமில்” என்னும் பதம் வாழ்வின் இலட்சியத்தை அடைந்துவிட்ட தனது மூலத்திற்கு மீண்டுவிட்ட மனித ஆன்மாவின் பூரண வளர்ச்சி நிலையைக் குறிக்கின்றது. இது மனிதன் இறைவனாகும் நிலையன்று என்பதை ரூமி கண்டிப்பாக வற்புறுத்தி விளக்குகின்றார். பகலில் நட்சத்திரங்கள் சூரியனின் பேரொளியில் தம் ஒளியை இழப்பது போல நெருப்பிலிடப்பட்ட இரும்பு நெருப்பின் தன்மையைப் பெறுவது போல மனிதன் இந்நிலையில் இறைவனின் பண்புகளைப் பெறுகிறான். ஆனால் அது மனிதன் இறைவனாகும் நிலையன்று.

பொதுவாக இஸ்லாமிய வரலாற்றிலும், சிறப்பாக சூபித் தத்துவத்தின் வரலாற்றிலும் ரூமிக்குச் சிறப்பிடமுண்டு. இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல சிந்தனைகளையும், தத்துவங்களையும் ஒன்றாய் இணைத்து ஒரு பொதுவானதத்துவத்தை அவர் உருவாக்கினார். இஸ்லாமிய வரலாற்றில் ரூமியின் செல்வாக்கு ஆழப் பதிந்துள்ளது. இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக் கவிஞரும், சிந்தனையாளருமான அல்லாமா இக்பால் தமது தத்துவத்தினை ரூமியின்சிந்தனையின் அடிப்படையிலேயே அமைத்தார். ”பீரே ரூம்” (ரூம் நாட்டின் ஞானி) என ரூமியை வர்ணிக்கும் இக்பால் “ஜாவிது நாமாவில்” ரூமியைத் தனக்குக் கிரகங்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டியாகக் கொள்கின்றார். இக்பாலின் “குதி” பற்றிய தத்துவமும், அறிவு பற்றிய கோட்பாடும், ரூமியின் சிந்தனையின் அடிப்படையில் எழுந்தவையாகும்.

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி
October 5, 2022



 



Post a Comment

Previous Post Next Post