திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-152

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-152


குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

அடுத்த உசுரு எதையும் கொல்லக் கூடாதுங்கிற முடிவுல இருக்க ஒருத்தங்கிட்ட நம்ம உயிரை எடுக்கக்கூடிய  அந்த எமன் கூட வரமாட்டான். 

குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

ஒரு உசுரைக் கொல்லுததால கெடைய்க்கக் கூடிய நன்மை ரொம்ப பெருசா இருக்கலாம். ஆனாலும் பண்புள்ள பெரிய ஆளுக அந்த நன்மையை கேவலமாதான் நெனைப்பாங்க. 

குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

கொலை செஞ்சு பொழைக்கக் கூடிய கேடு கெட்ட ஆளுங்க இருக்காங்களே.. அவொ எல்லோரையும் பெரியவங்க கழுசடையாத்தான் நெனைய்ப்பாங்க. 

குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

இந்த ஒலகத்துல எதுவுமே நெரந்தரம்லாம் கெடையாது. இந்த உண்மை தெரியாம எல்லாமே நெரந்தரம்னு நெனைய்க்கது முட்டாத்தனமானது.

குறள் 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

நம்மகிட்ட  வந்து சேர்ந்த  செல்வம் நெரந்தரம் இல்லைங்கிறதை நல்ல புரிஞ்சுகிட்டு, அதை வச்சு நாலு பேருக்கு நல்லதா செய்யணும். 

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post