இனியவை நாற்பது-21

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது. 

விளக்கம்:

மற்றவர்களுடைய சொத்தினை பறிக்காமல் வாழ்வது இனிது. 
அற வழிப்படி இல்லாதவற்றை நீக்கி வாழ்வது இனிது. 
எந்த வித நெறிகளும் இல்லாதவர்களுடன் கூட்டு சேராமல் இருக்க தேவையான வழிகளைத் தெரிந்து வாழ்வது இனிது.


இனியவை நாற்பது-22

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது. 

விளக்கம்:

வருமானத்தை அறிந்து, அதற்குள் வருமாறு வழங்குகின்ற வள்ளல் குணம் இனிது. 
ஒருவருக்கு சார்பாக நடந்து கொள்ளாமல் பொதுவாக இருப்பது இனிது. 
எவ்வளவு பெரிய பயன் கிடைப்பதாக இருந்தாலும், எதையும் ஆராயாமல்  செய்யாதவராக  வாழ்வது இனிது.

(தொடரும்)