Ticker

6/recent/ticker-posts

மௌன மொழியில்...!


பத்து மாதம் சுமந்த
கருவறை வரலாறு
கண்முன் வந்து போகலாம்

பிரசவிக்கும் போது 
சந்தித்த ஆகாச வலி
நினைவுக்கு வரலாம் 

தன் வாயிலிருந்து உணவெடுத்து
பிள்ளைக்கு ஊட்டிய காட்சி 
திரைப் படமாக விரியலாம்

பிள்ளை நோயுற்ற போதெல்லாம்
தான் தூங்காத நிமிடங்கள்
கடந்து போகலாம் 

" எம்பிள்ளை
சமயத்துக்கு சாப்பிடுவானா?
சமயத்துக்கு தூங்குவானா?
மகிழ்ச்சியாக இருப்பானா?
கஷ்டப்படுவானா?
நான் அருகில் இருக்க மாட்டேனே?"

பலநூறு எண்ணங்கள்
வரிசையாக 
வந்துபோகலாம் ...

மகிழ்வுந்தில் அழைத்துவந்து
சாலையோரம் 
இறக்கி வைத்து விட்டு

" அப்பாடா" 
பெரும் பாரம் இறங்கியதாய்
பெருமூச்சு விட்டு திரும்பும்
பெற்ற மகன் 
போகும் திசையையே
பார்த்துக் கொண்டிருக்கும்
வயதான தாயின்
கண்கள் பேசும்
மௌன மொழியில்...

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...


 


Post a Comment

1 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் சார்...
    இந்த வார இதழில்
    எனது கவிதையும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது .
    நீங்கள் வழங்கிய வாய்ப்புக்கு இதயம் நிறைந்த நன்றிகள்...

    நேசமுடன்

    ஐ.தர்மசிங்
    நாகர்கோவில்

    ReplyDelete