புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-33

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-33


இருமருங்கிலும் பூக்கள் பூத்துக்குழுங்கிய அழகான நீண்ட பாதையில்  உந்துருளி நகர்ந்து சென்று, அந்தப் பிரமாண்டமான கட்டிடத்தின் நுழைவாயிலை அடைந்தது. உருளியை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே நுளைந்தார்கள்.

அங்கிருந்த விற்பனை பீடத்தில், பல்வகை உணவுப்பொருட்கள் அழகாகக் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. பால் வகை உற்பத்திப் பொருட்கள் தவிர, ஸ்ரோபர்ரி கொண்டு செய்யப்பட்ட ஜாம்,  பானங்கள் என்பனவும் அங்கு காணப்பட்டிருந்தன. 

புல் வெளியைத் தாண்டி சிறிது தூரத்தில் பயிர்ச் செய்கைப் பண்ணை ஒன்று யன்னலினூடே  தெரிந்தது. 

விற்பனை பீடத்தில்,  அழகாகக் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களைச் சுட்டிக் காட்டிய இர்வின்,  “இவற்றில் வேண்டியதைக் கேட்டு எடுத்துக்கொள்” என்று செரோக்கியிடம் கூறினான். 

செரோக்கியின் கண்கள்  சிவப்பாக கண்குளிர்ச்சியாகக் காணப்பட்ட ஸ்ரோபர்ரி பானத்தின் மேல் சென்றது. 

கூச்சப்பட்டவனாக அவன் அதற்கு விரல் நீட்டினான்!

அங்கிருந்த பணிப்பெண்களில் ஒருத்தி அதனை எடுத்து அலாக்காகத் திறந்து அதற்குள் குழாய் ஒன்றை இட்டு செரோக்கியிடம் தந்தாள்! 

அந்தப் பணிப்பெண் அணிந்திருந்த ஆடையும், அவளது தொப்பியும் அதில் பொறிக்கப் பட்டிருந்த பறவை இறகும் செரோக்கியின் கண்களைக் கவர்ந்தன.

தம் இனத்தவர் கொண்டாட்டங்களின்போது தலையில் சூடிக்கொள்ளும் இறக்கைகளும், மலர்களும் அப்போது அவன் நினைவில் வந்து போனது. பணிப்பெண் அணிந்திருந்த ஆடையில்,  ரெங்க்மாவை வைத்துப் பார்த்துக் கொண்டே அழகிய மங்கையின் விரல் வறுடலோடு வாங்கிக் கொண்ட பானத்தை சுவைத்துப் பருகலானான்! தன் வாழ்நாளில் இப்படியான ஒரு பானத்தை அதுவும் குழாய் கொண்டு இன்றுதான் அவன் அருந்துகின்றான்!

இர்வின் பால் பானமொன்றை  அருந்தி முடித்ததும், பணங்கொடுத்துவிட்டு அங்கிருந்து  அவர்கள்  விடை பெற்றுக் கொண்டனர். 

அந்தப் பணிப்பெண்ணின் பார்வை தன் மீது படர்ந்ததையும், அவள்  ஏக்கம் கலந்து தன்னை வழியனுப்பி வைத்ததையும், செரோக்கியால் உணர முடிந்தது!

இப்பொழுது செரோக்கியின் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று விடயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. 

இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் அவனுக்கு இர்வினின் உதவி தேவைப்பட்டது. எந்த விடயத்தை முற்படுத்துவது என்பதில் அவன் குழம்பிப் போயிருந்தான்! 

இறுதியாக எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு - உந்துருளி ஓட்டக் கற்றுக்கொள்வதை  அவன் தன் முதல் தெரிவாக்கிக் கொண்டான்! 

இருவரும் வண்டியில் ஏறியதும் அது  வேகமாக  வந்த வழியே  திரும்பி  நகரத் தொடங்கியது.

வழமையாக அவர்கள் ஆடை மாற்றிக் கொள்ளும் மரத்தடியில் வண்டி நின்றபோது, செரோக்கி உந்துருளி ஓட்டக் கற்றுக்கொள்ளும் தன் நிலைப்பாட்டை இர்வினிடத்தில் வெளிப்படுத்தினான்; அவன் மறுக்கவில்லை; அடுத்த நாளைக்கு ஆயத்தமாக வரும்படி குறிப்பிட்டான்!

வனவாசிகள் உடையினை மாற்றிக் கொண்ட செரோக்கி, தான் கொண்டுவந்த புராதனப்பையை இர்வினுக்குக் காட்டாமலேயே, ஜாகை நோக்கி நடந்தான்  

(தொடரும்)

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post